மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா பங்கேற்றால், நிச்சயம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்படுவார் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவை மும்பை அணி ரிலீஸ் செய்யுமா அல்லது ஏலத்தில் வாங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் அக்.31ஆம் தேதிக்குள் ரிடெய்ன் செய்யப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 6 வீரர்களை ரிடெய்ன் செய்ய அனுமதி அளித்திருந்தாலும், அவர்களுக்கான ஊதியமாக ரூ.18 கோடி, ரூ.14 கோடி, ரூ.11 கோடி, ரூ.18 கோடி மற்றும் ரூ.14 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அன்-கேப்ட் வீரர்களை தக்க வைத்தால் ரூ.4 கோடி ஊதியமாக அளிக்கப்பட வேண்டும். இதனால் ஒவ்வொரு அணியும் யார் யாரை ரிடெய்ன் செய்யலாம் என்பது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து வருகிறது. அந்த வகையில் மும்பை அணியில் ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, திலக் வர்மா, ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் கடந்த சீசனில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு, இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார். இதனால் ரோஹித் சர்மா மும்பை அணியுடன் தொடர்வாரா என்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. அதேபோல் மும்பை அணி ரோஹித் சர்மாவை ரிடெய்ன் செய்ய வாய்ப்பில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மும்பை அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், மும்பை அணியால் ரோஹித் சர்மா தக்க வைக்கப்படுவாரா அல்லது மெகா ஏலத்திற்கு வருவாரா என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். ஒருவேளை மெகா ஏலத்திற்கு வந்தால், எந்த அணி அவரை வாங்க முயற்சிக்கும் என்பதும் ஆர்வமாக உள்ளது. நிச்சயம் ஏராளமான அணிகள் போட்டிபோடும் என்று நினைக்கிறேன்.
அதேபோல் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக, ஒரு வீரராக மிகச்சிறந்தவர். உச்சக்கட்ட ஃபார்மில் இருந்து வருகிறார். தனியாளாக ஏராளமான போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். 37 வயதாகிய போதும், அவரால் இன்னும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட முடியும். ஒருவேளை ரோஹித் சர்மா மெகா ஏலம் வந்தால், நிச்சயம் அதிக தொகைக்கு வாங்கப்படுவார்.
மும்பை அணிக்காக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. அவரின் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றது மகிழ்ச்சியான விஷயம். எப்போது சீனியர் வீரர்களையும், முன்னாள் வீரர்களையும் மதிக்கக் கூடியவர். ரோஹித் சர்மாவிடம் அந்த குணம் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.