பெங்களூர்: மும்பை அணியின் முன்னாள் கேப்டனாக ரோஹித் சர்மா ஆர்சிபி அணிக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஜாம்பவான் கிரிக்கெட்டரான டி வில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். ஒருவேளை ரோஹித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியே வந்தால், அது மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மை காலங்களாக ரோஹித் சர்மா ரசிகர்களிடையே நிலவி வரும் ஒரே கேள்வி, மும்பை அணியில் ரோஹித் சர்மா தொடர்வாரா என்பது தான். ஏனென்றால் கடந்த சீசனில் மும்பை அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். அதேபோல் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்து, ரோஹித் சர்மாவை இம்பேக்ட் பிளேயராக மும்பை அணி விளையாட வைத்து அவமானம் செய்தது.

இதனால் அடுத்த சீசனில் ரோஹித் சர்மா மும்பை அணியில் இருந்து வெளியேறுவார் என்று கூறப்பட்டது. ஆனால் டி20 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றிருப்பதால், ரோஹித் சர்மாவை மும்பை அணி ரீடெய்ன் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரோஹித் சர்மா பெரிய தொகை கொடுத்து வாங்க லக்னோ, பஞ்சாப், ஆர்சிபி உள்ளிட்ட அணிகள் போட்டி போடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிலும் ஆர்சிபி அணி இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாததால், அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஆர்சிபி ஜாம்பவான் டி வில்லியர்ஸ் பேசியிருக்கிறார். அதில், ஒருவேளை ரோஹித் சர்மா மெகா ஏலத்தில் பங்கெடுத்தால், அவரை வாங்குவதற்கு ஆர்சிபி அணி 100 சதவிகிதம் முயற்சிக்க வேண்டும். அவரை கேப்டன் பதவியை ஏற்கவும் ஆர்சிபி அணி நிர்வாகம் பேச வேண்டும்.
ஏனென்றால் ரோஹித் சர்மாவுக்கு ஒரு பிளேயிங் லெவனை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதன் மூலமாக ஆர்சிபி அணியின் கோப்பை கனவு நனவாக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மும்பை அணியில் இருந்து ரோஹித் சர்மா வெளி வந்து ஆர்சிபி அணியுடன் இணைவதற்கு 0.1% சான்ஸ் மட்டுமே உள்ளது. ரோஹித் சர்மா வருவாரா என்ற கேள்வியே எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.
ஒருவேளை அப்படி ரோஹித் சர்மா மாறினால், அது மிகப்பெரிய தலைப்பு செய்தியாக இருக்கும். குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்ததை விடவும் பெரிய விஷயமாக இருக்கும். ஏனென்றால் மும்பை - ஆர்சிபி அணிகளுக்கு இடையில் மிகப்பெரிய ரைவல்ரி இருக்கிறது. அதனால் ரோஹித் சர்மா வருவதற்கு ஒரு வாய்ப்பு கூட இல்லை. மும்பை அணி ரோஹித் சர்மாவை வெளியில் விடாது.
அதனால் ஆர்சிபி அணி டூ பிளசிஸை கேப்டனாக தொடர வேண்டும். என்னை பொறுத்தவரை வயது ஒரு பொருட்டே அல்ல. ஏனென்றால் டூ பிளசிஸ் சிறந்த ஃபிட்னஸ் உடன் இருக்கிறார். ஆர்சிபி அணி வீரர்களுடன் டூ பிளசிஸ் நல்ல உறவை வைத்திருக்கிறார். மீண்டும் கேப்டன்சியை ஏற்பதால், அவருக்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஆனால் இன்னும் வீரராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.