ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசன் மிகவும் மோசமாக அமைந்திருக்கிறது. இதுவரை விளையாடிய எட்டு போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இதன் மூலம் இனி எஞ்சி இருக்கும் ஆறு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பு என்ற இக்கட்டான நிலைக்கு ராஜஸ்தான் அணி தள்ளப்பட்டு இருக்கிறது. ராஜஸ்தான் போட்டியில் நன்றாக விளையாடியும், சில தவறான யுக்திகளை செய்து சிக்கிக் கொள்கிறது.

ஆனால் இன்றைய ஆட்டத்தில் எல்லாம் நன்றாக விளையாடியும் கடைசி ஓவரில் வெறும் ஒன்பது ரன்கள் அடிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் முழு பொறுப்பையும் தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தற்போது என்னுடைய எண்ண ஓட்டத்தை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று எனக்கே தெரியவில்லை. 19வது ஓவர் வரை போட்டியில் நாங்கள் இருந்தோம். ஆனால் என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை.
எனினும் இந்த தோல்விக்கான பணியை நானே ஏற்றுக் கொள்கின்றேன். நான் 19வது ஓவரிலே இந்த போட்டியை முடித்திருக்க வேண்டும். நாங்கள் இந்த போட்டியில் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்துதான் விளையாடினோம். ஆனால் நாங்கள் வீசிய கடைசி ஓவரில் நாங்கள் எதிர்பார்க்காத படி அதிக ரன்கள் சென்று விட்டது. லக்னோ அணியை 165 ரன்களில் இருந்து 170 ரன்கள் வரை சுருட்டி இருந்தால் நாங்கள் நிச்சயம் வெற்றி பெற்று இருப்போம்.
ஆனால் நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் கொடுத்து விட்டோம். எனினும் அது பற்றி கவலைப்படாமல் இந்த இலக்கை நிச்சயமாக நாங்கள் வெற்றிகரமாக எட்டிருக்க வேண்டும். ஆடுகளம் குறித்து எந்த ஒரு புகார் நான் தெரிவிக்க விரும்பவில்லை. இன்று நல்ல ஆடுகளம் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஐபிஎல் தொடரில் சில தவறான பந்துகளை வீசினால் அது ஒட்டுமொத்த போட்டியையுமே பாதிக்கும் என்பதற்கு இது உதாரணம் என்று ரியான் பராக் கூறியுள்ளார்.