மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் அடுத்த கிறிஸ் கெயிலாக வர வாய்ப்பு இருப்பதாக யுவராஜ் சிங் தந்தை யோகராஜ் சிங் தெரிவித்திருக்கிறார். 25 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், இதுவரை 5 t20 போட்டிகளில் விளையாடி மூன்று விக்கெட்டுகளும் பேட்டிங்கில் 13 ரன்களும் அடித்திருக்கின்றார்.
மொத்தமாக டி20 கேரியரில் 24 போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளும், மொத்தமாக பேட்டிங்கில் 119 ரன்களும் அடித்துள்ளார். அர்ஜூன் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கை அவருடைய தந்தை போல் உச்சத்தை தொடாமல் இருக்கிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், நான் அர்ஜுனுக்கு சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உங்களின் பந்துவீச்சில் நீங்கள் செலுத்தும் கவனத்தை குறைத்துக் கொண்டு பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்துங்கள். சச்சினும் எனது மகன் யுவராஜும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.
எனவே சச்சின் மகனுக்கு யுவராஜ் சிங் மூன்று மாதம் பயிற்சி வழங்க வேண்டும். அவ்வாறு செய்தால் நிச்சயம் அடுத்த கிறிஸ் கெயிலாக அர்ஜுன் டெண்டுல்கர் வர அதிக வாய்ப்பு இருக்கிறது. அர்ஜுன் டெண்டுல்கர் வேக பந்துவீச்சாளராக இருப்பதால் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதன் மூலம் பந்தையும் சிறப்பாக வீச முடியாது. எனவே அர்ஜூன் டெண்டுல்கரை யுவராஜ் சிங் சில காலம் தத்தெடுத்துக் கொண்டு பயிற்சி வழங்க வேண்டும் என்று யோக்ராஜ் தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் ஏற்கனவே அபிஷேக் ஷர்மாவை வழிநடத்தி வருகிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.
அபிஷேக் ஷர்மா தற்போது கிரிக்கெட்டில் சிறந்து விளங்குவதற்கு யுவராஜ் சிங் வழங்கும் அறிவுரைகள் தான் காரணம் என்று யோக்ராஜ் சிங் ஏற்கனவே கூறி வந்த நிலையில் தற்போது அர்ஜுன் டெண்டுல்கரையும் யுவராஜ் சிங் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. யுவராஜ் சிங் அபிஷேக் ஷர்மாவை உண்மையிலேயே பெரிய வீரராக மாற்றினார் என்றால் அவர் ஏன் பயிற்சியாளராக வரக்கூடாது என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடப்பு சீசனில் அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு போட்டியில் கூட மும்பை அணிக்காக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.