மும்பை: 18வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. 5 முறை சாம்பியனான மும்பை அணி மெகா ஏலம் முடிவடைந்து புதிய அணி கட்டமைத்த போதும், அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. ஹர்திக் பாண்டியா தலைமையில் கடைசியாக ஆடிய 11 போட்டிகளில் 2ல் மட்டுமே மும்பை வென்றிருக்கிறது.
இதனால் தொடர்ந்து 5வது ஆண்டாக மும்பை அணி கோப்பையை தவறவிடுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் பேசிய வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், மும்பை இந்தியன்ஸ் 35 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தபோது, அவர்கள் தோல்வி உறுதி என்று தோன்றியது. அதே நேரத்தில், குஜராத் அணி முதல் 2 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்திருந்தனர்.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து
அதன்பின் திலக் வர்மா - சூர்யகுமார் யாதவும் பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்தனர். ஆனால் 190 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்யும் போது ரன் ரேட்டை தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஆனால் இருவருமே நிதானமாக விளையாடியதால், ரன் ரேட் ஏறிக் கொண்டே சென்றது. இறுதியில், குஜராத் அணி சிறப்பாக பேட்டிங் செய்தது என்று சொல்ல வேண்டும்.
மும்பைக்கு சிக்கல் இல்லை
குஜராத் அணி எதிர்பார்த்ததை விட 15 முதல் 20 ரன்கள் அதிகம் எடுத்ததாக நினைக்கிறேன். பனிப்பொழிவும் வரவில்லை என்பதால், அது மும்பைக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. ஆனாலும் மும்பை அணி பெற்ற 2 தோல்விகள் பெரிய விஷயமல்ல. என்னை பொறுத்தவரை இன்னும் அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கான பாதையில் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
ஃபார்மில் இல்லாத ரோஹித் சர்மா
அதேபோல் மும்பை அணியின் ரோஹித் சர்மா முக்கியமான கட்டத்தில் இருக்கிறார். 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரோஹித் சர்மா இப்போது இல்லை. அவர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தொடக்க காலத்தில் இருந்த பல விஷயங்கள் அவரிடம் இப்போது கிடையாது. அவர் இன்னும் தனது இயல்பான திறமையையும் உள்ளுணர்வையும் நம்பியிருக்கிறார்.
ரியான் ரிக்கல்டன் பேட்டிங்
இந்திய பிட்ச்களில் டி வில்லியர்ஸ், கிளாசன் போன்ற சில தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களே சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். அதனால் ரியான் ரிக்கல்டன் இந்திய பிட்சில் சிறப்பாக செயல்பட இன்னும் சில காலம் எடுக்கும். அதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் நல்ல பேட்டிங் பிட்சை நம்பி இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
பிரசித் கிருஷ்ணாவின் ஸ்லோ பால்
இதேபோட்டி வான்கடே மைதானத்தில் நடந்திருந்தால், மும்பை அணியால் இந்த இலக்கை எட்டியிருக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்ந்து அம்பாதி ராயுடு பேசுகையில், இந்த ஆட்டத்தில் சரியான நேரத்தில் குஜராத் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக பிரசித் கிருஷ்ணா ரன்களை சிக்கனமாக விட்டுக் கொடுத்ததோடு, விக்கெட்டையும் வீழ்த்தினார். ஸ்லோயர் பந்துகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தினார்.
அம்பாதி ராயுடு கருத்து
சிராஜ் பலமுறை இப்படி பவர் பிளே ஓவர்களில் மிரட்டலாக செயல்பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன். அவரது இன்-ஸ்விங்கர் பந்துகள், அவுட்-ஸ்விங்கரை விடவும் வேகமாக இருக்கிறது. அவர் மணிக்கட்டை பயன்படுத்தி அவுட்-ஸ்விங்கரை முயற்சிக்கும்போது வேகத்தைக் குறைத்து, பந்து தேவைக்கு முன்பே ஸ்விங்காக தொடங்குகிறது. ஆனால் இன்-ஸ்விங்கர் மணிக்கட்டை பயன்படுத்துவதில்லை. அதுதான் அவரின் விக்கெட்டுக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சாய் சுதர்சனின் திறமை
தொடர்ந்து சஞ்சய் மஞ்ச்ரேகர் பேசுகையில், சுப்மன் கில் இன்னும் முழு திறமையை வெளிப்படுத்தவில்லை. ஆனால் சாய் சுதர்ஷன் சிறந்த இன்னிங்ஸை ஆடி இருக்கிறார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் எப்போதும் 140க்கு மேல் இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணிக்காக ஆடியிருந்தாலும், மீண்டும் மீண்டும் திறமையான பேட்ஸ்மேன் என்பதை நினைவூட்டுகிறார். குஜராத் அணி இன்னும் முழு திறமையை வெளிப்படுத்தாத போதும் வென்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.