மும்பை: லக்னா சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தங்கள் அணியின் கேப்டன் கே எல் ராகுலை 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக விடுவித்த பின் வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அவரை மட்டம் தட்டும் விதமாக பேசி இருப்பதாக சர்ச்சை வெடித்து இருக்கிறது. கே எல் ராகுல் தனது சுயநலத்துக்காகவும், தனது தனிப்பட்ட சாதனைகளுக்காகவும் ஆடியது போல அவர் சூசகமாக பேசி இருக்கிறார்.
இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் 6 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஐந்து வீரர்களை தக்க வைத்தது. அதில் கேப்டன் கே எல் ராகுல் பெயர் இடம் பெறவில்லை. அவரை அணியில் இருந்து விடுவித்து இருக்கிறது லக்னோ அணி.

அவருக்கு பதிலாக நிக்கோலஸ் பூரன்-ஐ அந்த அணியின் கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிக்கோலஸ் பூரனுக்கு 21 கோடி ரூபாய் சம்பளமாக அளித்து இருக்கிறது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி, மொஹ்சின் கான் ஆகிய வீரர்கள் தக்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இது பற்றி சஞ்சீவ் கோயங்கா பேசி வெளியிட்டு இருக்கும் வீடியோவில், "எங்கள் முதல் ரிட்டன்ஷன் ஆக நிக்கோலஸ் பூரனை தக்க வைப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. இரண்டு நிமிடங்களில் அந்த முடிவை எடுத்து விட்டோம். இரண்டு அன் கேப்டு வீரர்களாக மொஹ்சின் கான் மற்றும் ஆயுஷ் பதோனியை தேர்வு செய்தோம். ஜாகிர் கான் மற்றும் ஜஸ்டின் லாங்கர் மற்றும் எங்கள் நிபுணர் இணைந்து இந்த முடிவை எடுத்தனர்." என்றார்.
மேலும், "ரிட்டன்ஷனில் எங்கள் முடிவு எளிமையாக இருந்தது. எந்த வீரர்கள் வெற்றிக்காக ஆடுகிறாரோ, அவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அணியை முதலில் வைத்து ஆடுபவராக இருக்க வேண்டும், தங்கள் சொந்த சாதனைகள் மற்றும் சுயநலத்துக்காக ஆடுபவரை விட அணிக்காக ஆடுபவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம்." இவ்வாறு சஞ்சீவ் கோயங்கா பேசி இருக்கிறார்.
இதில் தனிப்பட்ட சாதனைகளுக்காக ஆடும் வீரர் வேண்டாம் என அவர் சொல்லி இருப்பது கே எல் ராகுலை தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சஞ்சீவ் கோயங்கா ஈகோ பிடித்தவராக இருக்கிறார் என்றும், கே எல் ராகுலிடம் சஞ்சீவ் கோயங்கா கடந்த ஆண்டு மைதானத்தில் வாக்குவாதம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் சர்ச்சை ஆனதால், ராகுலை அணியை விட்டு நீக்கிவிட்டார் என்றும் கூறி வருகின்றனர்.
வேறு சிலரோ, கே எல் ராகுல் எப்படிப்பட்ட வீரராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஒரு வீரரை அணியை விட்டு நீக்கிய பின் அவரைப் பற்றி விமர்சனம் செய்து பேசுவது மோசமான உதாரணம் எனவும் கூறி வருகின்றனர். கே எல் ராகுல் வேறு அணிக்கு செல்வதே சிறந்தது எனவும் சில ரசிகர்கள் கூறி உள்ளனர்.