மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் பார்வையாளர் எண்ணிக்கை மிரள வைக்கும் வகையில் அதிகரித்துள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களிலேயே இந்த ஆண்டு அதிக பார்வையாளர்கள் ஐபிஎல் தொடரை பார்த்துள்ளனர். அது குறித்த புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
18வது ஆண்டாக 2025 ஐபிஎல் தொடர் நடந்து முடிந்தது. இந்தத் தொடரை ஒட்டுமொத்தமாக 100 கோடி பார்வையாளர்கள் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் பார்த்துள்ளனர். மொத்தமாக 84,000 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டு இருக்கின்றன.

இதுவே ஐபிஎல் வரலாற்றில் அதிக அளவிலான பார்வையாளர் எண்ணிக்கை மற்றும் பார்க்கப்பட்ட நேரமாகும். இந்த ஆண்டு ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் இணைந்து ஜியோஸ்டார் என்ற ஒரே நிறுவனமாக ஐபிஎல் தொடரை ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.
இணைய வழியில் மொபைல், இணையதளங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி போன்ற பல்வேறு டிஜிட்டல் வடிவங்களில் முந்தைய ஆண்டை விட அதிக அளவிலான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். 2300 கோடி பார்வைகள் மற்றும் 38,460 கோடி நிமிடங்கள் டிஜிட்டல் வடிவத்தில் பார்க்கப்பட்டு இருக்கின்றன.
கடந்த ஆண்டை விட ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு டிவி போன்ற இணைய வழியில் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொடரைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது மாறி வரும் டிஜிட்டல் பொழுதுபோக்கு சூழ்நிலையை சுட்டிக்காட்டும் வகையில் உள்ளது.
டிஜிட்டல் வடிவத்தை விட எப்போதும் பார்க்கப்படும் தொலைக்காட்சி வடிவத்திலான பார்வையாளர் எண்ணிக்கை இந்த ஆண்டும் அதிகரித்த நிலையிலேயே இருந்தது. தொலைக்காட்சி மூலம் இந்த ஆண்டு மொத்தம் 45,600 கோடி நிமிடங்கள் ஐபிஎல் தொடர் பார்க்கப்பட்டு இருக்கிறது. இதுவே தொலைக்காட்சி வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி அதிக அளவில் பார்க்கப்பட்ட நிகழ்வாகும்.
2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியை மிக அதிக அளவிலான பார்வையாளர்கள் பார்த்தனர். இது மிகப்பெரும் சாதனையாகவும் மாறியது. மொத்தம் 31.70 கோடி நிமிடங்கள் இந்த இறுதிப் போட்டி ஜியோஸ்டாரில் மட்டும் பார்க்கப்பட்டது. தொலைக்காட்சியில் 16.9 கோடி பார்வையாளர்கள் 1500 கோடி நிமிடங்கள் வரை இந்த இறுதிப் போட்டியைப் பார்த்திருக்கின்றனர். இதுவே எந்த ஒரு ஐபிஎல் போட்டியும் அதிக அளவில் பார்க்கப்பட்ட எண்ணிக்கை ஆகும்.