கொல்கத்தா: கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் தொடக்க விழாவில் பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் அமர்க்களப்படுத்தியுள்ளார். அனைத்து மொழிகளிலும் பாடல்களை பாடிய ஸ்ரேயா கோஷல், தமிழில் வெளியான ஆயுத எழுத்து படத்தின் "ஜன கன மன" பாடலை பாடியது தமிழக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
18வது ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழா கொல்கத்தா மேடையில் தொடங்கியுள்ளது. கடந்த சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றதால், இம்முறை முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கேகேஆர் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது.

அதற்கு முன்பாக தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் தொடக்க விழாவின் தொடக்கத்தில் மேடையில் தோன்றிய பாலிவுட் ஸ்டாரான ஷாரூக் கான் ரசிகர்களை வரவேற்றார். இதன்பின் பெங்காலைச் சேர்ந்த பிரபல பாடகியான ஸ்ரேயா கோஷல் இசை நிகழ்ச்சி தொடங்கியது. ஸ்ரேயா கோஷல் 13 மொழிகளில் பாடி இருப்பதால், என்னென்ன மொழிகளில் பாடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அதற்கேற்ப பாலிவுட்டின் பத்மாவத் படத்தில் இடம்பெற்ற "கூமரு.. கூமரு" பாடலை பாட தொடங்கிய அவர், சில நிமிடங்களில் தமிழில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் இடம்பெற்ற "ஜன கன மன.. ஜனங்களை நினை.. கனவுகள் வெல்ல" என்று பாடியது தமிழ் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அதன்பின் ஓம் ஷாந்தி ஓம் பாடலை பாடிய அவர், இறுதியாக ஏஆர் ரஹ்மானின் வந்தே மாதரம் பாடலை பாடினார்.
அந்த பாடலின் போது ஒட்டுமொத்த கொல்கத்தா மைதானமும் எழுந்து நின்று பாடத் தொடங்கியது. இறுதியாக அவர் இசை நிகழ்ச்சியை முடித்துவிட்டு செல்ல, பின்னர் பாலிவுட் நடிகையான திஷா படானியின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கிளாமராக மேடையில் தோன்றிய அவர், வண்ண விளக்குகள் ஒளிர ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இதுவும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இருப்பினும் கடைசியாக நடந்த நடன நிகழ்ச்சியே ரசிகர்களை அதிகமாக ஈர்த்தது. மேடையில் தோன்றிய ஷாரூக் கான், நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் இருவரையும் வரவேற்றார். அப்போது விராட் கோலி, இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் விளையாடி இம்பேக்ட் கொடுப்பேன் என்று தெரிவித்தார். இதன்பின் ரிங்கு சிங் - ஷாரூக் கான் இணைந்து டான்ஸ் ஆட, அரங்கமே அதிர்ந்தது.
பின்னர் விராட் கோலி சிரித்து கொண்டே நிற்க, ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஷாரூக் கானுடன் இணைந்து டான்ஸ் ஆடினார். விராட் கோலியின் டான்ஸை கண்ட ரசிகர்கள் கூடுதல் உற்சாகமடைந்தனர். இதன்பின் ஐபிஎல் தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக கேகேஆர் அணியின் கேப்டன் ரஹானே கோப்பையை மேடைக்கு கொண்டு வந்தார்.