கொல்கத்தா : 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விடுவிக்கப்பட்டு இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் அணிக்கு கோப்பை வென்று தந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்கியது ஏன்? என்ற அதிர்ச்சி ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதன் மூலம், ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் பங்கேற்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.
ஆனால், தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர் இது பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயரை தாங்கள் நீக்கவில்லை என்றும், அவர் தனது சந்தை மதிப்பை அறிய ஏலத்தில் பங்கேற்க விரும்பினார் என்றும் கூறி இருக்கிறார்.

இது பற்றி வெங்கி மைசூர் பேசுகையில், "எங்கள் அணியின் தக்க வைப்பு வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். ஆனால், இந்த முடிவுகள் ஒரு வழிப்பாதை அல்ல. ஒரு அணி மட்டுமே எந்தெந்த வீரர்களை தக்க வைக்கலாம் என்று முடிவை எடுக்க முடியாது. அந்த வீரர் அணியில் நீடிக்க விரும்புகிறாரா? என்பதையும் பார்க்க வேண்டும்." என்றார்.
மேலும், "எங்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இடத்தில் இருந்தார். அவர் தான் எங்கள் அணியின் கேப்டனாகவும் இருந்தார். அவர் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதால் தான் அவரை நாங்கள் 2022ல் வாங்கினோம். ஆனால், சில விஷயங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு வீரர் தனது சந்தை மதிப்பை அறிய விரும்பினால் ஏலத்தில் பங்கேற்பது சரியான விஷயமாக இருக்கும். அதை அவர் செய்வதும் சரியான விஷயம் தான். அதை தான் நாங்கள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விரும்புகிறோம்." என்றார்.
மேலும், "எங்கள் வீரர்கள் அவர்களுக்கு வேண்டிய முடிவை எடுப்பதற்கு ஆதரிக்கிறோம். தனிப்பட்ட முறையில் ஸ்ரேயாஸ் ஐயருடன் நான் நல்ல உறவில் இருக்கிறேன். அதே சமயம் அவருக்கான முடிவை எடுப்பதற்கான சுதந்திரமும் அவருக்கு உள்ளது." என்றார் வெங்கி மைசூர்.
முன்னதாக வெளியான தகவலின் அடிப்படையில் பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குறைவான சம்பளம் அளித்து தக்க வைக்க முடிவு செய்ததாகவும், அதனாலயே அவர் ஏலத்தில் பங்கேற்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது.
IPL RETENTION 2025- கொல்கத்தா அணியிலிருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்.. ஷாரூக்கான் அணி கொடுத்த டிவிஸ்ட்
மற்றொரு தகவலில் டெல்லி கேபிடல்ஸ் அணியை தற்போது நிர்வாகித்து வரும் ஜிஎம்ஆர் நிறுவனம் ஸ்ரேயாஸ் ஐயரை மீண்டும் டெல்லி அணிக்கு வருமாறு அழைத்ததாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே அவர் ஏலத்தில் பங்கேற்க இருக்கிறார் என்றும், டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை ஏலத்தில் வாங்க முழுமூச்சுடன் இறங்கும் என்றும் கூறப்படுகிறது.