மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கு மெகா ஏலம் வரும் ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவில் தொடங்குகிறது. இந்த மெகா ஏலத்தில் 574 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் இந்தியாவைச் சேர்ந்த 366 வீரர்களும், வெளிநாட்டைச் சேர்ந்த 208 வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
குறிப்பாக இதில் 81 வீரர்கள் தங்களுடைய அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்திருக்கிறார்கள். இந்த மெகா ஏலத்தில் மொத்தம் 205 இடத்திற்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். இந்த மெகா ஏலத்தில் எந்த வீரர்கள் அதிக விலைக்கு ஏலத்தில் செல்வார்கள் என்று பலரும் தங்களை கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் ரெய்னா தன்னுடைய கணிப்பை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பண்டை தான் அதிக விலை கொடுத்து ஒவ்வொரு அணியும் ஏலத்தில் எடுக்க தீவிரம் காட்டும். ஏனென்றால் அவர் கேப்டன் ஆகவும் அதிரடி வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் இருக்கின்றார்.
அது மட்டும் அல்லாமல் அவருடைய சந்தை மதிப்பும் கூடுதலாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஒரு வீரரை நீங்கள் பல விளம்பரங்களிலும் பயன்படுத்தலாம். எனவே ரிஷப் பண்ட் அதிக விலைக்கு செல்வார். என்னைக் கேட்டால் 25 கோடியில் இருந்து 30 கோடி ரூபாய் வரை ரிஷப் பண்ட் ஏலத்திற்கு செல்வார்.
ஐபிஎல் கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என்ற உத்வேகம் ரிஷப் பண்டிடம் இருக்கின்றது. அவர் டெல்லி அணிக்காக விளையாடிய போது கடுமையாக முயற்சி செய்தார். இதைப் போன்று கேகேஆர் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் லக்னோ அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ராகுலும் அதிக விலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. தற்போது நடைபெற உள்ள மெகா ஏலத்தில் வீரர்களை மட்டும் சில அணிகள் தேர்வு செய்யாது.
ஏனென்றால் நான்கு அணிகள் கேப்டன்கள் இல்லாமல் தற்போது இருக்கிறார்கள். இதனால் இந்திய வீரர்களை கேப்டன் ஆக்க இந்த அணிகள் கடுமையாக முயற்சி செய்யும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். ரிஷப் பண்ட் தன்னுடைய ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கையை 2016 ஆம் ஆண்டு டெல்லி அணியில் இருந்து தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு டெல்லி அணி ரிஷப் பண்டிற்கு 16 கோடி ரூபாய் கொடுத்து தக்க வைத்துக் கொண்டிருந்தது.இந்த நிலையில் பண்ட், டெல்லி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.