மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் சனிக்கிழமை மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த சூழலில் ஐந்து முறை சாம்பியன் பட்டங்களை வென்ற சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி வரும் 23ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறது.
இந்த போட்டியில் காயம் காரணமாக பும்ரா விளையாட மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த சீசனில் குறிப்பிட்ட நேரத்தை தாண்டி பந்து வீசியதாக ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதன் மூலம் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார். இந்த சூழலில் தமக்கு பதிலாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என ஹர்திக் பாண்டியா அறிவித்திருக்கிறார். இது குறித்து மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் ஜெவர்த்தனே ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஹர்திக் பாண்டியா, "நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கின்றேன். ஏனென்றால் எங்கள் அணியில் மூன்று கேப்டன்கள் என்னுடன் விளையாடுகிறார்கள். ரோகித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகிய மூன்று வீரர்களும் எனக்கு துணை நிற்பார்கள். எனக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அவர்கள் நிச்சயம் எனக்கு அறிவுரைகளை வழங்குவார்கள் என்று கூறினார்."
மேலும் சிஎஸ்கேவுக்கு எதிரான முதல் போட்டியில் தடை காரணமாக தான் விளையாடவில்லை என்றும் அதற்கு பதில் சூரியகுமார் கேப்டனாக செயல்படுவார் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். "தடை பெற்றது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த ஆண்டு இந்த தவறு நடைபெற்றிருக்கிறது. நாங்கள் இரண்டு நிமிடம் தாமதமாக ஓவர்களை வீசி இருக்கிறோம்."
"அப்போது இவ்வளவு பெரிய தண்டனை எனக்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த விதியை அடுத்த ஆண்டும் கடைப்பிடிப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஸ்லோ ஓவர் பிரச்சனையை அதே சீசனில் முடித்து விட வேண்டும். அடுத்த ஆண்டு கொண்டு செல்லும் விதி வேண்டுமா என நிர்வாகிகள் முடிவெடுக்க வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்."