மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் கேகேஆர் அணிக்கு ட்ரேட் செய்யப்படுவார் என்ற தகவல் தொடர்பாக மும்பை அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல் சூர்யகுமார் யாதவிற்கான எதிர்காலம் திட்டம் என்பது குறித்தும் மும்பை அணி கூறியுள்ளது.
மும்பை அணியால் 3 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல முடியாததால், கடந்த ஆண்டு ரோஹித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து அந்த அணி நிர்வாகம் நீக்கியது. அதன்பின் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்பட்டார். ஆனால் ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் மைதானத்திலேயே எதிர்ப்பு தெரிவித்ததால், மும்பை அணி பின்னடைவை சந்தித்தது.

இதனால் கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி 10 தோல்வியுடன் மும்பை அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணி கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார். இதனால் மும்பையிலேயே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்புக்கு வருவார் என்று சொல்லப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி அளிக்கப்பட்டது. இதனால் மும்பை அணியில் கூடுதல் குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் இந்திய அணிக்கு தலைமைத் தாங்கும் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் வீரராக மும்பை அணியில் தொடர்வார்களா என்ற குழப்பம் ஏற்பட்டது.
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவுக்கு கீழ் விளையாடுவது சரியாக இருக்குமா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். இதனிடையே கேகேஆர் அணி சார்பாக சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன்சி ஆஃபர் அளிக்கப்பட்டதாக தகவல் வெளி வந்தது.
அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்கும், மும்பை அணியின் சூர்யகுமார் யாதவை கேகேஆர் அணிக்கும் ட்ரேட் செய்வதற்கு பேச்சுவார்த்தைகள் எழுந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. ஏற்கனவே ரோஹித் சர்மா குழப்பமே தீராத நிலையில், சூர்யகுமார் யாதவின் இடமும் சர்ச்சையை ஏற்படுத்தியது மும்பை அணிக்கு தலைவலியை கொடுத்தது.
தற்போது சூர்யகுமார் யாதவ் விவகாரம் தொடர்பாக மும்பை அணி நிர்வாகி ஒருவர் பேசியிருக்கிறார். அதன்படி, சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை விட்டு வெளியேற மாட்டார். சோசியல் மீடியாவில் பரபரப்பை கிளப்பவே இதுபோன்ற செய்திகளை சிலர் வெளியிடுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
சூர்யகுமார் யாதவ் வேறு அணிக்கு செல்லவில்லை என்றாலும், அவருக்கான ஊதியத்தை எப்படி மும்பை அணி நிர்வாகம் கொடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் கூடுதல் ஊதியம் அளிக்க வேண்டும் என்பதோடு, ரீடெய்ன் செய்யும் முதல் 2 வீரர்களாகவும் இருக்க வேண்டும்.
அப்படி செய்தால் தான் அவர்களுக்கான ஊதியத்தை அளிக்க முடியும். இன்னொரு பக்கம் மும்பை அணியின் பொக்கிஷமாக பும்ரா வளர்ந்துவிட்டார். அவரை தக்க வைப்பதே மும்பை அணிக்கு தலைவலியை கொடுத்துள்ள நிலையில், சூர்யகுமார் யாதவை எப்படி மும்பை அணி நிர்வாகம் சமாளிக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.