மும்பை: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிய போட்டியில், விக்கெட் கீப்பரின் கிளவுஸ் ஸ்டம்புக்கு முன்னே இருந்ததால் அவுட் என சொல்லப்பட்ட வீரர் மீண்டும் அழைக்கப்பட்டு, அந்த பந்துக்கு நோபாலும் அறிவிக்கப்பட்டது. அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டாகவும் மாறியது. இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வருண் சக்கரவர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது நியாயமா? என அவர் கேட்டுள்ளார். பந்துவீச்சாளர்களுக்கு இதன் மூலம் அநீதி இழைக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
என்ன நடந்தது என்று பார்க்கலாம். மும்பை இந்தியன்ஸ் வீரர் ரியான் ரிக்கெல்டன் பேட்டிங் செய்தபோது, லெக் ஸ்பின்னர் ஜீசன் அன்சாரி வீசிய பந்தில் கவர் திசையில் நின்றிருந்த கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்தார். அவர் அவுட் என அறிவிக்கப்பட்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறியபோது, பவுண்டரி எல்லை அருகே நிறுத்தப்பட்டார்.

அப்போது மூன்றாவது அம்பயர் விக்கெட் கீப்பரின் கிளவுஸ் ஸ்டம்புக்கு முன்னே இருக்கிறதா? என சரிபார்த்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசனின் கிளவுஸ் சில இன்ச்கள் ஸ்டம்புக்கு முன்னே இருந்தன. இதை அடுத்து அந்த பந்து நோபால் என அறிவிக்கப்பட்டது. ரியான் ரிக்கெல்டன் அவுட் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது. அவர் மீண்டும் வந்து பேட்டிங் செய்தார். அந்த பந்து நோபால் என்பதால், அதற்கு அடுத்த பந்து ஃப்ரீ ஹிட்டாகவும் அமைந்தது.
இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "விக்கெட் கீப்பரின் கிளவுஸ் ஸ்டம்புக்கு முன்னே இருந்தால், அதை டெட்பால் என அறிவித்து விக்கெட் கீப்பருக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அதன் மூலம் அவர் மீண்டும் அந்த தவறை செய்யாமல் இருப்பார். ஆனால், நோபால் மற்றும் ஃப்ரீ ஹிட் கொடுக்கக் கூடாது. பந்துவீச்சாளர் இதில் என்ன தவறு செய்தார்? அவருக்கு ஏன் தண்டனை? இதை நாம் உரக்க சிந்திக்க வேண்டும். எல்லோரும் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
வருண் சொல்லியிருப்பது நியாயமான விஷயம்தான். ஏனெனில், விக்கெட் கீப்பர் செய்யும் தவறுக்கு பந்துவீச்சாளருக்கு ஒரு நோபால் மற்றும் ஃப்ரீ ஹிட் தண்டனை அளிக்கப்படுகிறது. என்னதான் அது அவரது அணிக்கு அளிக்கப்படும் தண்டனையாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அந்த பவுலரின் கணக்கில்தான் நோபால் சேரும். அதைத்தான் வருண் சக்கரவர்த்தி சுட்டிக்காட்டி இருக்கிறார்.