சென்னை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் 23 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்திருக்கிறது. இந்த சூழலில் கேகேஆர் அணியின் மிக முக்கிய வீரராக வெங்கடேஷ் ஐயர் திகழ்கிறார்.
எம்பிஏ பட்டதாரியான வெங்கடேஷ் ஐயர் கிரிக்கெட் வீரராக ஜொலித்த நிலையில் மீண்டும் தனது கல்வியை தொடர்ந்து வருகிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கல்வி என்பது மிகவும் முக்கியம். நாம் உயிர் வாழும் வரை நாம் கற்ற கல்வியும் அறிவும் நம்மிடம் தான் இருக்கும்.

என்னால் 60 வயது வரை கிரிக்கெட் விளையாட முடியாது. எனவே கிரிக்கெட் என்பது எனக்கு சிறிது காலம் தான் கைகொடுக்கும். அதன் பிறகு என் வாழ்க்கையில் நான் என்ன செய்யப் போகிறேன். அப்போது படிப்பு தான் எனக்கு கை கொடுக்கும். சில சமயம் கல்விக்காக நான் கிரிக்கெட்டில் இருந்து விடுமுறை கூட எடுத்திருக்கின்றேன்.
என்னால் இரண்டு விஷயத்தை ஒரே நேரத்தில் செய்ய முடியும் என்றால் நிச்சயம் நான் அதை செய்வேன். நான் கல்வி கற்பதன் மூலம் அது எனக்கு விளையாட்டுத் துறையிலும் கை கொடுத்திருக்கிறது. களத்தில் சிறந்த முடிவை எடுக்க என்னுடைய கல்வி உதவிகரமாக இருக்கிறது. என்னுடைய சக கிரிக்கெட் வீரர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.
கிரிக்கெட் அறிவு தொடர்பாக மட்டும் கற்காதீர்கள். பொது அறிவையும் கற்றுக் கொள்ளுங்கள் உங்களால் உங்களுடைய கல்லூரி பட்டப் படிப்பை முடிக்க நேரம் இருந்தால் நிச்சயம் முடித்து விடுங்கள். மேற்படிப்பையும் உங்களால் படிக்க முடிந்தால்,நிச்சயம் அதை செய்யுங்கள். தற்போது நான் நிதி துறை தொடர்பாக என்னுடைய phd பட்டம் படித்துக் கொண்டிருக்கின்றேன்.
அடுத்த முறை நீங்கள் என்னை காணும் போது டாக்டர் வெங்கடேஷ் ஐயர் என்று தான் என்னை அழைப்பீர்கள். ஐபிஎல் தொடரில் தொகை என்பது ஒரு அழுத்தத்தை எப்போதுமே கொடுக்காது நீங்கள் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் சென்றாலும் 20 கோடி ரூபாய்க்கு ஏலம் சென்றாலும் அது பிரச்சனை கிடையாது. நீங்கள் ஒரு முறை ஐபிஎல் பலத்திற்குள் வந்து விட்டால் உங்கள் அணிக்காக நீங்கள் வெற்றியைத் தேடித் தர வேண்டும் அதுதான் முக்கியம் என வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.