பெங்களூர்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் உலகிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்டமான சாதனையை விராட் கோலி நிகழ்த்தியுள்ளார். அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக ஆடிய போட்டியில், 30 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார். இது அவரது 63வது ஐபிஎல் அரை சதமாக அமைந்தது.
இந்த ரன் குவிப்பின்போது, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மட்டுமே 9000 ரன்களை கடந்திருந்தார். கிரிக்கெட் உலகில் ஒரே அணிக்காக 9000 டி20 ரன்களை குவித்த ஒரே வீரர் என்ற பிரம்மாண்டமான சாதனையை படைத்திருக்கிறார் விராட் கோலி. அவருக்கு அடுத்த இடத்தில் இந்த உலகப் பட்டியலில் ரோகித் சர்மாதான் இருக்கிறார்.

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 230 இன்னிங்ஸ்களில் 6060 ரன்கள் சேர்த்து இருக்கிறார். தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் விராட் கோலி, 271 இன்னிங்ஸ்களில் 9000 ரன்களை கடந்து இருக்கிறார். உலக அளவில் வேறு எந்த பேட்ஸ்மேனும் இப்படி ஒரு சாதனையை செய்ய முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த அளவுக்கு பிரம்மாண்டமான சாதனையாக இது அமைந்துள்ளது.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிக அரை சதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்தார். இதற்கு முன் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் மொத்தம் 62 அரை சதங்களை அடித்திருந்தார். அவர் அதை 184 இன்னிங்ஸ்களில் செய்திருந்தார். தற்போது விராட் கோலி 257 இன்னிங்ஸ்களில் 63 அரை சதங்களை அடித்து இருக்கிறார். டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் நான்கு சதங்களை அடித்து இருக்கிறார்; விராட் கோலி எட்டு சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 228 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூர் அணிக்கு விராட் கோலி 30 பந்துகளில் 54, மயங்க் அகர்வால் 23 பந்துகளில் 41, ஜிதேஷ் சர்மா 33 பந்துகளில் 85 ரன்கள் குவித்து கை கொடுத்தனர்.