மும்பை: ஐபிஎல் தொடரில் எங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் வர்ணனையின் போது பேசியது சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. 2008 முதல் ஐபிஎல் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.
முதல் சில ஐபிஎல் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களுக்கும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுக்கு இடையேயான உறவு மோசமானதை அடுத்து பாகிஸ்தான் வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை. இது நேரடியாக விதிக்கப்பட்ட தடை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பம் அளித்தாலும் எந்த அணியும் அவர்களை வாங்காது. இந்த மறைமுக தடையால் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க விண்ணப்பம் அளிப்பதில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் வரை முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும், தற்போதைய வர்ணனையாளர்களாக இருக்கும் வாசிம் அக்ரம் மற்றும் ரமீஸ் ராஜா ஆகியோர் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வந்தனர். வாசிம் அக்ரம் துவக்கத்தில் சில ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பவுலிங் ஆலோசகராக செயல்பட்டு வந்தார்.
பின்னர் அவர்களுக்கும் படிப்படியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. சமீபத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் போட்டியின் வர்ணனையின் போது ஆஸ்திரேலிய வர்ணனையாளர் ஐபிஎல் தொடரை பற்றி பேசினார். அப்போது அருகே இருந்த வாசிம் அக்ரம், தான் ஐபிஎல் தொடரில் இருந்து நீண்ட தூரம் விலகி வந்து விட்டதாக கூறினார்.
அதற்கு வர்ணனையாளர் மார்க் ஹோவர்ட் "ஏன்?" என கேள்வி எழுப்பினார். அதற்கு வாசிம் அக்ரம், "எங்களுக்கு ஐபிஎல் தொடரில் அனுமதி இல்லை." என்றார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்திய அணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில் நடைபெற உள்ள அந்த கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆடும் போட்டிகளை லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டு இருக்கிறது. ஆனால், பிசிசிஐ இதுவரை பங்கேற்பதாக உறுதியளிக்கவில்லை.