மும்பை: மும்பை அணியின் சீனியர் வீரர்களாக இருந்து வரும் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரை சமாளிப்பதற்காக தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ஜெயவர்தனே கொண்டு வரப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் மும்பை அணிக்கு ட்ரேட் செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டார். அதுமட்டுமல்லாமல் ரோஹித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கிய மும்பை அணி நிர்வாகம், பின்னர் எதிர் காலத்தை மனதில் வைத்து ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிப்பதாக அறிவித்தது.

ஆனால் மும்பை அணியிடம் பலமான வீரர்கள் இருந்த போதும், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் நிறைவு செய்தது. இதனால் மும்பை அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானி சோகமடைந்தனர். இந்த நிலையில் மெகா ஏலம் தொடங்குவதற்குள் மும்பை அணி அத்தனை சிக்கல்களையும் சரி செய்ய முடிவு எடுத்துள்ளது.
இதன் முதல் அடியாக தலைமைப் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் நீக்கப்பட்டு, மீண்டும் மும்பை அணிக்காக 3 கோப்பைகளை வென்று கொடுத்த ஜெயவர்தனே தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வரப்பட்டுள்ளார். 2017 முதல் 2022 வரை மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே செயல்பட்டு வந்தவர்.
இதனால் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோரை எப்படி கையாள வேண்டும் என்பதை ஜெயவர்தனே நன்றாக அறிவார். இதனிடையே தலைமைப் பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளதால், கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்டியாவும் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விவாதித்து வருகின்றனர்.
ஆனால் ரோஹித் சர்மாவுக்கு ஏற்கனவே 37 வயதாகிவிட்டதால், மும்பை அணி நிர்வாகம் கேப்டன்சியில் மாற்றம் செய்ய விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஏனென்றால் 31 வயதாகும் ஹர்திக் பாண்டியாவால் மும்பை அணியை இன்னும் 6 முதல் 7 ஆண்டுகள் தாராளமாக வழிநடத்த முடியும் என்று பார்க்கப்படுகிறது.
மீண்டும் கேப்டனாக ரோஹித் சர்மாவை நியமிப்பதன் மூலமாக மும்பை அணி வீரர்களிடையே தேவையில்லாத சிக்கல் எழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் சூர்யகுமார் யாதவும் இந்திய டி20 அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதனால் இவர்கள் அனைவரையும் ஒரே அணியில் வைத்து சமூகமான சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே ஜெயவர்தனே கொண்டு வரப்பட்டுள்ளார்.
கடந்த சீசனை போல் அல்லாமல் ரோஹித் சர்மாவுக்கு உரிய மரியாதையை அளிக்க மும்பை அணி தயாராக இருக்கிறது. அதேபோல் ரோஹித் சர்மாவும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புகள் உள்ளது. அதன்பின் மும்பை அணியின் ஆலோசகராக வாய்ப்பு இருக்கும் நிலையில், அம்பானி குடும்பத்தினருடன் தேவையில்லாத மோதல் போக்கில் ஈடுபட வாய்ப்பில்லை என்று பார்க்கப்படுகிறது.