மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை அணி தரப்பில் தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மார்கோ யான்சனை வாங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2021ஆம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய அவர், இம்முறை கூடுதல் அனுபவத்துடன் களமிறங்கும் போது சாதகம் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கான பணிகளை அனைத்து அணிகளின் நிர்வாகங்களும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இம்முறை மெகா ஏலத்தை மிகச்சிறப்பாக கையாள திட்டமிட்டு வருகிறது. ஏற்கனவே மும்பை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜெயவர்தனே கொண்டு வரப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மும்பை அணி தரப்பில் பும்ரா ரூ.18 கோடிக்கும், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தலா ரூ.16.35 கோடிக்கும், ரோஹித் சர்மா ரூ.16.30 கோடிக்கும், திலக் வர்மா ரூ.8 கோடிக்கும் ரீடெய்ன் செய்யப்பட்டனர். இதனால் மும்பை அணி மெகா ஏலத்தை ரூ.45 கோடியுடன் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,.
இதனிடையே மும்பை அணி நிர்வாகம் இந்த மெகா ஏலத்தில் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஒருவரை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. இதனால் பலரும் ட்ரென்ட் போல்ட் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரையும் வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் மும்பை அணி நிர்வாகம் தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளரான மார்கோ யான்சன் மீது கண் வைத்திருப்பது தெரிய வந்துள்ளது.
இவர் ஏற்கனவே 2021ஆம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடியவர் தான். 2 போட்டிகளில் விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் மும்பை அணியின் நெட் பவுலராகவும் இருந்திருக்கிறார். இதனால் மும்பை அணி நிர்வாகத்தையும், அவர்களின் கலாசாரத்தையும் நன்கு அறிந்தவராகவே பார்க்கப்படுகிறார்.
அதேபோல் மார்கோ யான்சன் நம்பர் 6 மற்றும் நம்பர் 7 வரிசையில் களமிறங்கி பேட்டிங் செய்யக் கூடிய வீரராக இருக்கிறார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு பின் யான்சனை களமிறக்கி கூட மும்பை அணியால் வெற்றி பெற முடியும். அதேபோல் பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் மற்றும் பவுன்ஸ் கொண்டு எதிரணியை திணறடிக்கக் கூடியவர். இதனால் மும்பை அணி குறைந்த தொகைக்கு இவரை வாங்க வாய்ப்புகள் உள்ளது.