மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறுவார் என்ற தகவல் பரவி வருகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வளர்ச்சி தலைவராக இருக்கும் முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் அது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை இழந்தார் ரோஹித் சர்மா. ஹர்திக் பாண்டியாவின் கீழ் ஆட வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக செயல்பட்டு கடைசி இடத்தை பிடித்தது. இந்த நிலையில் ரோஹித் சர்மா அந்த அணியின் நிர்வாகத்தின் மீது இருக்கும் அதிருப்தி காரணமாக 2025 ஐபிஎல் தொடருக்கு முன் அந்த அணியை விட்டு வெளியேறுவார் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

அவர் நேரடியாக வேறு அணிக்கு அணிமாற்றம் செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை எனில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்கும் பட்சத்தில், அவர் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. அது குறித்து பேசிய சஞ்சய் பங்கர், "ரோஹித் சர்மாவை ஏலத்தில் வாங்குவது என்பது எங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதைப் பொறுத்தது. ரோஹித் சர்மா ஏலத்திற்கு வந்தால் நிச்சயமாக அவர் மிகப்பெரிய தொகைக்கு தான் வாங்கப்படுவார்." என்று கூறி இருக்கிறார் சஞ்சய் பங்கர்.
இதன் மூலம், ரோஹித் சர்மாவை ஐபிஎல் ஏலத்தில் வாங்க பஞ்சாப் கிங்ஸ் நிச்சயம் முயற்சி செய்யும் என்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த நிலையில், ரோஹித் சர்மாவை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்க முயற்சி செய்ய உள்ளது.