IPL 2026: 5 ஐபிஎல் பயிற்சியாளர்களுக்கு டாட்டா பைபை.. கடுப்பில் உரிமையாளர்கள்.. யார் அவர்கள்?
மும்பை: 19வது ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற பல அணிகளும் முட்டிமோதி வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் போன்ற பலம் வாய்ந்த அணிகள் தொடரை விட்டு வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளன. இந்த சீசன் முடிந்தவுடன் பல அணிகளில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளன. குறிப்பாக, ஐந்து முன்னணி அணிகளின் தலைமை பயிற்சியாளர்கள் தங்களது பதவியை இழக்கப் போவதாக கூறப்படுகிறது.
அந்த ஐந்து அணிகளும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டதால் சம்பந்தப்பட்ட அணிகளின் உரிமையாளர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அதனால் அவர்களின் பதவி பறிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இந்தப் பட்டியலில் முதலில் இருப்பவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே. பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் இந்த ஆண்டு முதலில் வெளியேறிய அணி மும்பை இந்தியன்ஸ் தான். விளையாடிய 11 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் ஜெயவர்தனே இருவரின் அணுகுமுறையும் படுதோல்வி அடைந்துள்ளதால், அடுத்த சீசனில் இருவருமே நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மும்பை நிர்வாகம் புதிய பயிற்சியாளரை தேடும் பணியை தொடங்கும் என தெரிகிறது.
அடுத்ததாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள லக்னோ அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் பயிற்சியாளர் லாங்கரின் தவறான முடிவுகளே இதற்கு முக்கிய காரணம். சென்ற ஆண்டும் இந்த அணி மோசமாகவே செயல்பட்டது. சிறந்த வீரர்கள் இருந்தும் சரியான கூட்டணியை லாங்கரால் அமைக்க முடியவில்லை. தொடக்க வீரராக பண்ட், ஆயுஷ் பதோனியை இறக்கியதும், 3வது இடத்தில் மிரட்டும் நிக்கோலஸ் பூரனை பின்வரிசைக்கு தள்ளியதும் லாங்கரின் மாபெரும் வியூக தவறுகளாக பார்க்கப்படுகிறது.
3வது நபராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உள்ளார். அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அந்த அணி தற்போது 8வது இடத்தில் தவிக்கிறது. தலைமைப் பயிற்சியாளராக அபிஷேக் நாயரின் முன் அனுபவமின்மை அணியின் ஆட்டத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதேபோல, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் பதானியும் ஆபத்தான கட்டத்தில் உள்ளார். பலமான அணி இருந்தும், நிரந்தரமான ஆடும் லெவனை தேர்வு செய்யாமல் தொடர்ந்து செய்த பரிசோதனைகளால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெளியேறும் விளிம்பில் நிற்கிறது.
கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங். இவருடைய நிலைமை 50-50 ஆக உள்ளது. பல முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறிய நிலையிலும், சிஎஸ்கே தற்போது 5வது இடத்தில் போராடி வருகிறது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றால் அவரது பதவி தப்பும். ஒருவேளை சிஎஸ்கே வெளியேறினால், பல ஆண்டுகளாக நீடிக்கும் பிளெமிங் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications
