IPL 2026: ஐபிஎல் வீரர்கள் ஸ்மார்ட் கண்ணாடி, கூலிங்கிளாஸ் அணிய தடை.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
சண்டிகர்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஊழல் மற்றும் மேட்ச் ஃபிக்சிங்கைத் தடுப்பதற்காக, பிசிசிஐ-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு (ஏசிஎஸ்யு) அதிரடியான புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மைதானத்தில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்கியிருக்கும் முக்கிய பகுதிகளில் இனி 'ஸ்மார்ட்' கண்ணாடிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது சந்தையில் கிடைக்கும் நவீன ஸ்மார்ட் கண்ணாடிகள், கேமரா வசதி கொண்ட கூலிங்கிளாஸ்கள் மற்றும் ஆடியோ பதிவு செய்யும் வசதி கொண்ட சாதனங்கள் ஆகியவற்றை வீரர்கள் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சாதனங்கள் மூலம் நேரலையில் வீடியோக்களை ஒளிபரப்பவோ, வைஃபை அல்லது மொபைல் டேட்டா வசதி மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பவோ முடியும். மேலும் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதியும் இதில் உள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்கள் மேட்ச் ஃபிக்சிங் போன்ற முறைகேடுகளுக்குப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஊழல் தடுப்புப் பிரிவு கண்டறிந்துள்ளது.

ஐபிஎல் விதிமுறைகளின்படி, மைதானத்தில் வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இருக்கும் பகுதி (பிஎம்ஓஏ) மிகவும் பாதுகாப்பானது. இந்தப் பகுதிக்குள் நுழையும் வீரர்கள் ஏற்கனவே தங்களது மொபைல் போன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைப்பது கட்டாயமாகும். இனி அந்த வரிசையில், இந்த நவீன ஸ்மார்ட் கண்ணாடிகளையும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் இத்தகைய கண்ணாடிகளை வீரர்களுக்கு விளம்பரப்படுத்துவதைக் கவனித்த பிறகு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்நிய நபர்களுக்குத் தடை
இதுமட்டுமின்றி, ஹோட்டல் லாபிகள், கஃபேக்கள் மற்றும் வீரர்கள் தங்கியிருக்கும் பகுதிகளுக்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வலைப்பயிற்சியில் ஈடுபடும் பந்துவீச்சாளர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்களும் இத்தகைய தகவல் தொடர்பு சாதனங்களை ரகசிய இடங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பின்னணி
கடந்த 2013-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த சூதாட்டப் புகாருக்குப் பிறகு, வீரர்களைக் கண்காணிப்பதில் பிசிசிஐ மிகத் தீவிரமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த 2026 ஐபிஎல் தொடரில் புதிய தொழில்நுட்ப சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பின் தெரியாதவர்களிடம் பரிசுப் பொருட்கள் வாங்குவது, சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசுவது ஆகியவற்றையும் தவிர்க்குமாறு வீரர்களுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்க மைதானம் மற்றும் ஹோட்டல்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
