மும்பை: ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஈரான் மற்றும் அதை சுற்றி உள்ள வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் மோதல் காரணமாக எரிபொருள் மற்றும் எல்பிஜி வாயு விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் முதலில் கேஸ் விநியோகத்தில் சிக்கல் எழுந்த நிலையில், பெட்ரோல், டீசல் கையிருப்பு குறித்து நேற்று முதல் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்து இருக்கிறது. இது ஐபிஎல் போட்டிகளின் மைதான ஒளி விளக்குகள் (Floodlights) மற்றும் வீரர்களின் விமானப் பயணங்களைப் பாதிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தச் சூழல் குறித்துப் பேசிய ஐபிஎல் உயர் அதிகாரி ஒருவர், நிலைமையை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருவதாகவும், ஆனால் தற்போதைக்குத் தொடரின் அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "தற்போதைய சூழலை முன்கூட்டியே கணித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. நாங்கள் காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஹோட்டல்கள் மற்றும் எரிபொருள் விநியோகஸ்தர்கள் அனைவருடனும் பேசியதில், தற்போது எல்லாம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே கூறுகிறார்கள். எனவே, இப்போதைக்கு நாங்கள் எதையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை." என்று கூறினார்.

தொடர் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், மைதானப் பணிகள் மற்றும் வீரர்களின் வருகை உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். "அனைத்தும் சரியாகவே இருக்கிறது. தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை நிலைமை மோசமடைந்தால், அதற்கு ஏற்ப நாங்கள் உரிய நடவடிக்கைகளை எடுப்போம். எந்தச் சூழலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம்." என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இந்தத் தொடரின் முதல் போட்டி பெங்களூரு எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. சர்வதேச மற்றும் இந்திய வீரர்கள் அனைவரும் இந்தத் தொடருக்காகப் பயிற்சியைத் தொடங்கிவிட்டனர். போர் பதற்றங்கள் இருந்தாலும், ஐபிஎல் நிர்வாகம் தொடரைச் சிறப்பான முறையில் நடத்தி முடிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.