மும்பை: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி வசதிகள் குறித்து அனைத்து பத்து ஐபிஎல் அணிகளுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடுமையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மைதானங்களில் உள்ள ஆடுகளங்களைப் பாதுகாக்கவும், அனைத்து அணிகளுக்கும் சமமான வாய்ப்பை உறுதி செய்யவும் இந்த நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின்படி, ஒரு அணி பயிற்சி செய்து முடித்த ஆடுகளத்திலோ அல்லது வலைப்பயிற்சி இடத்திலோ மற்றொரு அணி பயிற்சி செய்யக் கூடாது. ஒவ்வொரு அணியின் பயிற்சிக்கும் புதிய ஆடுகளங்கள் தயார் செய்யப்பட வேண்டும். இரண்டு அணிகள் அடுத்தடுத்தோ அல்லது ஒரே நேரத்திலோ பயிற்சி மேற்கொண்டாலும், அவர்களுக்குத் தனித்தனி வலைகள் ஒதுக்கப்பட வேண்டும். ஒரு அணி தனது பயிற்சியை முன்கூட்டியே முடித்துவிட்டாலும், அந்த இடத்தை அடுத்த அணி பயன்படுத்தக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஆடுகளம் சாதகமாக மாறிவிடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி போட்டிகளை நடத்துவதற்கும் பிசிசிஐ கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒவ்வொரு அணியும் இந்த சீசனில் அதிகபட்சமாக இரண்டு பயிற்சி போட்டிகளை மட்டுமே விளையாட முடியும். அதற்கும் பிசிசிஐ-இன் முன் அனுமதியைப் பெறுவது கட்டாயமாகும். இந்தப் போட்டிகள் முக்கிய ஆடுகளத்தில் இல்லாமல், மைதானத்தின் ஓரத்தில் உள்ள பக்கவாட்டு ஆடுகளங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இரவு நேரத்தில் மின் விளக்குகள் ஒளியில் பயிற்சி போட்டிகளை நடத்தினால், அது மூன்றரை மணி நேரத்திற்கு மேல் நீடிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மைதானத்தின் முக்கிய ஆடுகளத்தைப் போட்டிக்காகத் தயார் செய்யும் பணிகளுக்காக, உள்ளூர் அணியின் முதல் போட்டி தொடங்குவதற்கு முந்தைய நான்கு நாட்களில் அந்த மைய ஆடுகளத்தில் எந்தப் பயிற்சியும் அல்லது பயிற்சி போட்டியும் நடத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அணிக்குப் பயிற்சி தேவைப்பட்டால், மாநில கிரிக்கெட் சங்கம் மாற்று மைதானத்தை இலவசமாக ஏற்பாடு செய்து தர வேண்டும்.

மார்ச் 16 ஆம் தேதி முதல், அணிகளுக்கு இரண்டு பயிற்சி வலைகளும், பந்துகளை அதிரடியாக அடித்துப் பழகுவதற்கான ஒரு பிரத்யேக ஆடுகளமும் மைதானத்தின் ஓரத்தில் ஒதுக்கப்படும். பயிற்சி நேரத்தைப் பொறுத்தவரை உள்ளூர் அணிக்கே முன்னுரிமை வழங்கப்படும். இரண்டு அணிகளும் ஒரே நேரத்தைக் கேட்டால், அணி மேலாளர்கள் பேசி முடிவெடுக்க வேண்டும். அவர்களால் சுமுகமான முடிவை எட்ட முடியாவிட்டால், பிசிசிஐ தலையிட்டு இரு அணிகளுக்கும் நேரத்தைச் சமமாகப் பிரித்து வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.