மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 'ஆட்டநாயகன்' விருது வென்ற வீரர் என்ற சாதனையை தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் இன்னும் தக்கவைத்துள்ளார். 2021 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், 184 போட்டிகளில் விளையாடி 12 முறை இந்த விருதை வெந்துள்ளார். அவர் விடைபெற்று 4 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையிலும், அவரது சாதனையை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.
ஆனால், 2026 ஐபிஎல் தொடரில் இந்த சாதனை முறியடிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, எம்.எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த சாதனைக்கு மிக அருகில் உள்ளனர். ரோஹித் மற்றும் தோனி தலா 10 முறையும், விராட் கோலி 9 முறையும் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர். இந்த சீசனில் இவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் புதிய சாதனை படைக்கப்படலாம்.

ஏபி டிவில்லியர்ஸ் - 12
கிறிஸ் கெய்ல் - 10
ரோஹித் சர்மா - 10
எம்.எஸ் தோனி - 10
விராட் கோலி - 9
டேவிட் வார்னர் - 9
யூசுப் பதான் - 9
ஷேன் வாட்சன் - 9
ரோஹித் மற்றும் கோலி 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடத் திட்டமிட்டுள்ள நிலையில், தோனியின் எதிர்காலம் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை ஒப்பந்தம் செய்துள்ளதால், 44 வயதான தோனி இந்த சீசனுடன் ஓய்வு பெற்று சிஎஸ்கே அணியின் ஆலோசகராகச் செயல்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு பிசிசிஐ கடந்த வாரம் 2026 ஐபிஎல் அட்டவணையை வெளியிட்டது. மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த நாள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை அணி தனது முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
