லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்விக்கு அடுத்தடுத்து தலைவலி ஏற்பட்டு வருகிறது. பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்) தொடரை விட ஐபிஎல் தொடரே சிறந்தது என வீரர்கள் மட்டுமல்லாமல், வர்ணனையாளர்களும் அங்கிருந்து வெளியேறி வருவது பாகிஸ்தான் வாரியத்திற்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் நிக் நைட், பிஎஸ்எல் 2026 தொடருக்கான ஆங்கில வர்ணனையாளர் குழுவில் ஒருவராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஜேபி டுமினி, மார்ட்டின் கப்தில் போன்ற முன்னணி வர்ணனையாளர்களுடன் நிக் நைட்டும் இடம் பெற்றிருந்தார். ஆனால், தொடர் தொடங்குவதற்கு முன்பே அவர் பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி, இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் 2026 தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளர் குழுவில் இணைந்துள்ளார்.

வர்ணனையாளர் நிக் நைட்டுக்கு முன்னதாக பிளெஸ்ஸிங் முசரபானி, ஸ்பென்சர் ஜான்சன் மற்றும் தசுன் ஷனகா போன்ற முன்னணி வீரர்கள் பிஎஸ்எல் தொடரைத் தவிர்த்துவிட்டு ஐபிஎல் தொடருக்கே முன்னுரிமை அளித்து வெளியேறினர். ஐபிஎல் தொடரில் கிடைக்கும் அதிக வருமானம் மற்றும் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவையே இதற்குக் காரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
இந்த ஆண்டு ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் ஆகிய இரண்டு தொடர்களும் ஒரே சமயத்தில் நடைபெறுகின்றன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீம்புக்காகவே கடந்த ஆண்டும், தற்போதும் ஐபிஎல் தொடர் நடக்கும் போது பிஎஸ்எல் தொடரை நடத்துவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனிடையே பாகிஸ்தானில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் போட்டிகள் வெறும் 2 நகரங்களுக்கு மட்டுமே சுருக்கப்பட்டது.
இந்த காரணங்களால் வெளிநாட்டு வீரர்கள் அங்கு விளையாடத் தயங்குகின்றனர். சில வெளிநாட்டு வீரர்கள் அங்கு விளையாடக் கூடுதல் பணம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் ஒப்பந்தத்தை மீறி வெளியேறும் வீரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு அந்தத் தொடரில் விளையாடத் தடை விதிக்கப்படும் என்றும் மோஷின் நக்வி எச்சரித்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) முறையிடவும் பாகிஸ்தான் வாரியம் ஆலோசித்து வருகிறது. எனினும், கோடிகள் கொழிக்கும் ஐபிஎல் தொடரின் செல்வாக்கிற்கு முன்னால் பாகிஸ்தான் வாரியத்தின் மிரட்டல்கள் எடுபடாது என்றே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது மோஷின் நக்விக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.