சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் பரிமாற்ற செய்திகள் தற்போதே வெளிவரத் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக, ஐந்து முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி, சில முக்கிய வீரர்களை வர்த்தகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஒருவரை டெல்லி அணியிடம் இருந்து வாங்க திட்டமிட்டு இருக்கிறது.
மேலும், சஞ்சு சாம்சனை அணிக்குக் கொண்டுவரும் முயற்சியில் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தற்போது நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவையும் விடுவிக்க அந்த அணி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட ரச்சின் ரவீந்திரா, 2025 ஆம் ஆண்டு தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 8 போட்டிகளில் விளையாடிய அவர், 65 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோருடன் மொத்தம் 191 ரன்கள் மட்டுமே எடுத்தார். சிஎஸ்கே அணி தொடர் தோல்விகளைச் சந்தித்ததால், அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாலும், அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணியின் டோனோவன் ஃபெரீராவுக்காக ரச்சின் ரவீந்திராவை வர்த்தகம் செய்ய சிஎஸ்கே விரும்புவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் சிஎஸ்கே-வின் மற்றொரு அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்க்ஸ்-இல் இடம் பெற்று இருக்கிறார். இந்த ஆண்டு அவர் மேஜர் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக அவரை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே-வில் ஆட வைக்க நடக்கும் முயற்சி தான் இது.
டெல்லி அணி, ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் ஆகியோரை விடுவிக்க வாய்ப்புள்ளதால், புதிய தொடக்க ஆட்டக்காரரை தேடி வருகிறது. மறுபுறம், டோனோவன் ஃபெரீரா, டெல்லி அணியால் பெரும்பாலும் ஒரு ஃபினிஷராகவே பயன்படுத்தப்பட்டார். அதிலும் அவர் 2025 ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடவில்லை.
2025 ஐபிஎல் சீசனில் அவர் டெல்லி அணிக்காக ஒரு போட்டியில் விளையாடி 1 ரன் எடுத்தார். டு பிளெசிஸ் டெல்லி அணியால் விடுவிக்கப்படும் பட்சத்தில், சிஎஸ்கே அவரை மீண்டும் அணிக்குக் கொண்டுவர முயற்சிக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
இதேவேளை, சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா மற்றும் டுவைன் பிராவோ ஆகியோர் 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் துணைப் பணியாளர்களாக அணிக்குத் திரும்பக்கூடும் என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.
ஐபிஎல் 2025 இன் பிற்பகுதியில், சுரேஷ் ரெய்னா அடுத்த சீசனில் சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராக திரும்புவார் என்று செய்திகள் வந்தன. டுவைன் பிராவோ, ஐபிஎல் 2025 க்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகச் சென்றார்.
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக, கடந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்த சிஎஸ்கே, அடுத்த ஆண்டுக்கான அணியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.