சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அதிர்ஷ்டம் மாறியுள்ளதாகவும், நடப்பு ஐபிஎல் 2026 சீசனில் அந்த அணி ஒரு மோசமான காலகட்டத்தில் இருப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், தெரிவித்துள்ளார். ஏப்ரல் 5 அன்று பரம எதிரிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தனது மூன்றாவது தொடர்ச்சியான தோல்வியை சந்தித்து, இந்த சீசனைத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக மற்ற அணிகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்த சிஎஸ்கே, கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களிலும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. நடப்பு சீசனிலும் இதேபோன்ற ஒரு முடிவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில், தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஆர்சிபி அணியிடம் தோல்வியடைந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் அதிர்ச்சியூட்டும் சரிவு குறித்து பத்ரிநாத் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார். அதில்,"முன்பு, பிற அணிகளில் தடுமாறிய வீரர்கள் சிஎஸ்கே-வில் வந்து சிறப்பாக செயல்படுவார்கள். இப்போது, சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறும் வீரர்கள் பிற இடங்களில் திறம்பட செயல்படுகிறார்கள்."

"தலைமைக்குழுவின் வார்த்தைகளும் செயல்களும் முற்றிலும் முரணாக உள்ளன. அவர்களின் சில நடவடிக்கைகளுக்கும் மாற்றங்களுக்கும் பின்னால் எந்த விசயமும் இல்லை. களத்திலும் வெளியிலும் சிஎஸ்கே அணியில் ஒரு நெருக்கடி இருப்பதாகத் தெரிகிறது."
ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே, கடந்த ஆண்டு இதுவரை இல்லாத மிக மோசமான சீசனை கடந்து, 14 போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் முடித்தது.சிஎஸ்கே நிர்வாகத்தையும் தலைமைக்குழுவையும் சுப்ரமணியம் பத்ரிநாத் கேள்விக்குள்ளாக்கினார். ஏலத்தில் அனுபவமில்லாத இந்திய வீரர்களான பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் ஷர்மா ஆகியோருக்காக மொத்தம் ₹28.40 கோடி முதலீடு செய்தது. இதன் மூலம் பல சிறந்த வீரர்களை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பை இழந்தது.
இது குறித்துப் பேசிய பத்ரிநாத், "நிர்வாகத்தை கேள்வி கேட்க வேண்டும். ஏலத்தில் நாங்கள் தோற்றுவிட்டோம் என்று ருதுராஜ் கூட கூறியுள்ளார். சிஎஸ்கே ஏலத்தில் ஒரு படுதோல்வி. மெகா ஏலத்திற்கு முன் அவர்கள் ஜடேஜாவை தக்கவைத்துக் கொண்டனர். கே.எல். ராகுலை டெல்லி கேபிடல்ஸ் ₹13.75 கோடிக்கு வாங்கியபோது, சிஎஸ்கே அவரைப் பெற்றிருக்கலாம். அப்போது சிஎஸ்கே கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்திருந்தால், சாம்சனுக்காக ஜடேஜாவை விட்டுக் கொடுக்க வேண்டியதில்லை" என்று கூறினார்.

"சிஎஸ்கே சமீம் ரிஸ்வியை ₹8.5 கோடிக்கு வாங்கி, அவரை 6-வது இடத்தில் களமிறக்கியது. அவர் அங்கே சிறப்பாக செயல்படவில்லை, இப்போது டெல்லி கேபிடல்ஸ் அவரை ₹95 லட்சத்திற்கு வாங்கி, 4-வது இடத்தில் அற்புதமாகப் பயன்படுத்துகிறது. அதேபோல, ரவி பிஷ்னோயை சிஎஸ்கே குறைந்த விலைக்கு வாங்கவில்லை. லுங்கி என்கிடி மற்றொரு வீரர். அவரையும் சிஎஸ்கே மலிவான விலைக்கு இழந்தது."சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் ஆகியோரை சஞ்சு சாம்சனுக்காக டிரேட் செய்த ஒப்பந்தம், இந்த சீசனில் இதுவரை ஒரு பேரழிவாகவே மாறியுள்ளது. சாம்சன் தான் விளையாடிய மூன்று இன்னிங்ஸ்களிலும் இன்னும் இரட்டை இலக்க ரன்களை எட்டவில்லை.