மும்பை: வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியால் ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் பெரிய மாற்றங்கள் நிகழ உள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் காயங்களால் துவண்டு போயிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பரம எதிரியான மும்பையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தினால், புள்ளிப்பட்டியலில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் காண ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது. இந்த ஒரு வெற்றி சிஎஸ்கே-வின் தலையெழுத்தை எப்படி மாற்றப்போகிறது என்பது குறித்த அலசலை இங்கே காண்போம்.
தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. அந்த அணியின் ரன் ரேட் -0.780 ஆக உள்ளது. அதே சமயம் மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று, சிறந்த ரன் ரேட் (0.067) அடிப்படையில் 7வது இடத்தில் உள்ளது. எனவே, இந்த இரு அணிகளும் மோதும் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றால், அந்த அணி 6 புள்ளிகளுடன் நேரடியாக 7வது இடத்திற்கு முன்னேறும்.

அதுமட்டுமின்றி, ஒரு மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் அல்லது அதிக பந்துகள் மீதமிருக்க சிஎஸ்கே வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் 6வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் (6 புள்ளிகள், -0.821 ரன் ரேட்) அணியையும் பின்னுக்குத் தள்ளி 6வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை அதிர்ஷ்டம் கைகொடுத்து மிகப்பிரம்மாண்ட வெற்றி கிடைத்தால், 5வது இடத்தில் இருக்கும் டெல்லி கேபிடல்ஸ் (6 புள்ளிகள், -0.130 ரன் ரேட்) அணிக்கும் சிஎஸ்கே சவால் விட முடியும். அதாவது ஒரே ஒரு வெற்றி சென்னையை 8வது இடத்திலிருந்து 6வது இடத்திற்குத் தூக்கிவிடும்.
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற பொதுவாக ஒரு அணிக்கு 14 அல்லது 16 புள்ளிகள் தேவைப்படும். சிஎஸ்கே அணி இதுவரை 4 புள்ளிகள் மட்டுமே எடுத்துள்ள நிலையில், மீதமுள்ள 8 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே 16 புள்ளிகளுடன் பாதுகாப்பாக பிளே ஆஃப் செல்ல முடியும். 5 போட்டிகளில் வென்றால் 14 புள்ளிகளுடன் மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளுக்காகக் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

தற்போது பஞ்சாப் கிங்ஸ் 11 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடனும் முதல் இரண்டு இடங்களில் வலுவாக உள்ளன. 3 மற்றும் 4வது இடங்களுக்கான போட்டியில் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் மல்லுக்கட்டுகின்றன. எனவே, இனி வரும் ஒவ்வொரு போட்டியும் சென்னைக்கு 'வாழ்வா-சாவா' போராட்டம்தான். மும்பையை வீழ்த்தி அந்த வெற்றிப் பயணத்தைத் தொடங்கினால், சென்னை ரசிகர்களுக்குப் பிளே ஆஃப் நம்பிக்கை மீண்டும் துளிர்விடும். காயத்தில் இருக்கும் தோனி மீண்டும் அணிக்குத் திரும்பினால், அது சிஎஸ்கே-வுக்கு இன்னும் கூடுதல் பலமாக அமைந்து பிளே ஆஃப் கனவை நனவாக்கும்.