அகமதாபாத்: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய ஆட்டத்தில், லக்னோ சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி மீண்டும் தனது பாணியில் 'நோட்புக்' கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் விக்கெட்டை எடுத்ததும் அவர் இந்த கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதில் தண்டனையை தவிர்க்க ஒரு புதிய யுத்தியை கையாண்டார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, விக்கெட் வீழ்த்திய பிறகு எல்லை மீறி கொண்டாடியதற்காக திக்வேஷ் ரதிக்கு 3 முறை அபராதம் விதிக்கப்பட்டது. முதலில் போட்டி ஊதியத்தில் 25 சதவீதமும், பின்னர் இருமுறை தலா 50 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டது. தொடர்ந்து விதிமுறைகளை மீறியதால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டுள்ள திக்வேஷ் ரதி, இந்த ஆண்டு பிசிசிஐ தண்டனையில் இருந்து தப்பிக்கத் தனது கொண்டாட்ட முறையைச் சற்று மாற்றியுள்ளார். குஜராத் தொடக்க வீரர் சாய் சுதர்சன் விக்கெட்டை வீழ்த்தியதும், அவரை நேரடியாகப் பார்க்காமல் தரையை நோக்கிப் பார்த்தபடி கற்பனையாகக் கையெழுத்துப் போடும் 'நோட்புக்' கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு பேட்ஸ்மேனை நேருக்கு நேர் பார்த்து ஆக்ரோஷமாகச் செயல்பட்டதால் தான் அவருக்குத் தண்டனை கிடைத்தது.
தற்போது திக்வேஷ் ரதியின் கணக்கில் 5 குறைபாட்டுப் புள்ளிகள் (Demerit points) உள்ளன. ஐபிஎல் விதிமுறைப்படி இது 36 மாதங்களுக்கு நீடிக்கும். ஒருவேளை இந்த சீசனில் அவர் ஆக்ரோஷத்தைக் காட்டி புள்ளிகள் 8-ஆக உயர்ந்தால் 2 போட்டிகளிலும், 11-ஆக உயர்ந்தால் 3 போட்டிகளிலும் விளையாடத் தடை விதிக்கப்படும். இதனைத் தவிர்க்கவே அவர் அமைதியான முறையில் தனது கொண்டாட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளார்.
ஆட்டத்தைப் பொறுத்தவரை, குஜராத் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. குஜராத் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 28 ரன்கள் மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. பிரசித் கிருஷ்ணா தற்போது அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான 'பர்ப்பிள் கேப்' பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறினார்.

தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை துரத்திய குஜராத் அணிக்குச் சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அரைசதம் அடித்து சிறப்பான அடித்தளம் அமைத்தனர். இறுதியில் குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையிலேயே அபார வெற்றி பெற்றது.