2026 ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி இதுதான்.. ‘க்ரோக் ஏஐ' குஜராத்துக்கு வாய்ப்பு இருக்கா?
அகமதாபாத்: 2026 ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில், க்ரோக் ஏஐ, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என கணித்துள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்று ஐபிஎல் தொடரில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி காத்திருக்கிறது. அதே சமயம், 2022-ல் அறிமுகமான முதல் ஆண்டிலேயே கோப்பை வென்ற குஜராத் அணி, சுப்மன் கில் தலைமையில் தனது இரண்டாவது கோப்பையைத் தேடுகிறது. இந்நிலையில், இந்த இறுதிப்போட்டியில் வெல்லப்போவது யார் என்பது குறித்து 'க்ரோக்' (Grok) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் சுவாரஸ்யமான கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

வெற்றி வாய்ப்பு யாருக்கு?
க்ரோக்-கின் கணிப்புப்படி, இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியே வெல்ல அதிக வாய்ப்புள்ளது. புள்ளி விவரங்கள், தற்போதைய ஃபார்ம் மற்றும் அணிகளின் பலத்தை ஆய்வு செய்த பிறகு, பெங்களூரு அணி 20 முதல் 40 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது 5 முதல் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலோ வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவின் பலம்
முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணிக்கு சாதகமாக உள்ளது. விராட் கோலி மற்றும் கேப்டன் ரஜத் படிதார் ஆகியோர் அசுர ஃபார்மில் உள்ளனர். இவர்களுக்கு டிம் டேவிட் மற்றும் குருணால் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் வலுசேர்க்கின்றனர். புவனேஸ்வர் குமார், ஜேக்கப் டஃபி மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் அடங்கிய சமபலமுள்ள பந்துவீச்சு ஆர்சிபி-க்குச் சாதகமாக உள்ளது.
குஜராத்தின் சவால்
குஜராத் அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பலம். சுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் பேட்டிங்கில் மிரட்டக்கூடியவர்கள். ரஷித் கான் மற்றும் ரபாடா தலைமையிலான பந்துவீச்சும் வலுவாக உள்ளது. இருப்பினும், முதல் மூன்று வீரர்களை அந்த அணி அளவுக்கு அதிகமாகச் சார்ந்திருப்பது அவர்களின் பலவீனமாகக் கருதப்படுகிறது.
யார் அந்த ஆட்டநாயகன்?
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது யாருக்குக் கிடைக்கும் என்பதிலும் க்ரோக் ஏஐ 4 வீரர்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் முதலிடத்தில் உள்ளார். முதல் தகுதிச் சுற்றில் இவர் 93 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. படிதார் தவிர்த்து, விராட் கோலி, குஜராத் கேப்டன் சுப்மன் கில் அல்லது சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆகியோரில் ஒருவருக்கு இந்த விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
