IPL 2026: இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா செய்த மர்மமான செயல்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விவாதம்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு காரியம் சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் அவர் வெளியேறப்போகிறாரா அல்லது இது வெறும் தொழில்நுட்ப கோளாறா என்ற விவாதம் தற்போது அனல் பறக்கிறது. ராய்ப்பூரில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 'அன்-பாலோ' செய்ததாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்தித்து, பிளே ஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துவிட்டது. மே 10 அன்று பெங்களூரு அணியிடம் தோற்ற சில நிமிடங்களிலேயே, ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பின்தொடரும் கணக்குகளின் எண்ணிக்கை 151-ல் இருந்து 150 ஆகக் குறைந்தது. அந்தப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கம் காணாமல் போனதை ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைரலாக்கினர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் அந்த எண்ணிக்கை 151 ஆக உயர்ந்ததுடன், மும்பை இந்தியன்ஸ் பக்கமும் அவரது பட்டியலில் மீண்டும் இடம் பெற்றது.

இந்த மர்மமான செயல் ரசிகர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது முதலே மும்பை ரசிகர்களிடையே ஒரு பிரிவினை இருந்தது. நடப்பு சீசனும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.
முதுகுவலி காரணமாக 3 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அவர் களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினார். இந்த இக்கட்டான சூழலில் தான் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் செய்த இந்த வேலை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்செயலாக நடந்ததா அல்லது தோல்வி விரக்தியில் எடுக்கப்பட்ட முடிவா என்பது குறித்து ஹர்திக் தரப்பிலோ அல்லது மும்பை அணி நிர்வாகமோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவே இருப்பதாகத் தெரிகிறது. அணியின் தோல்விக்கு கேப்டன் மட்டுமே காரணம் அல்ல, டி20 ஆட்டமுறை மாறி வருவதே காரணம் என நிர்வாகம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, ஹர்திக் பாண்டியாவின் இந்த மர்மமான செயல் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவரது கேப்டன் பதவி குறித்த பலத்த சந்தேகங்களை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
