டி20 உலககோப்பை வென்ற 3 இந்திய கேப்டன்கள் முதல் முறையாக சந்திப்பு.. ரசிகர்கள் மனதை வென்ற புகைப்படம்
டி20 உலககோப்பையை வென்ற மூன்று இந்திய கேப்டன்களும் முதல் முறையாக ஒரே இடத்தில் சந்தித்து கொண்ட நிகழ்வு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 'தோனி, ரோஹித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முக்கியமான சிஎஸ்கே (CSK) – எம்ஐ (MI) போட்டிக்கு முன்னதாக ஒரு வைரல் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஐபிஎல் 2026-ன் இந்த இரண்டு பெரிய அணிகளும் பிளேஆஃப் கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க போராட உள்ளன.
பரபரப்பு மிகுந்த "எல் கிளாசிக்கோ" மோதலைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சனிக்கிழமை மாலை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. கடைசியாக வான்கடே மைதானத்தில் சந்தித்தபோது, சஞ்சு சாம்சனின் அசத்தலான சதம் சிஎஸ்கே அணிக்கு 103 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை தேடித் தந்தது.

இந்த ஐபிஎல் 2026 சீசனில் பிளேஆஃப் வாய்ப்புகளை தக்கவைக்க, மும்பை இந்தியன்ஸ் அணி பழிவாங்கும் வேட்கையுடன் களமிறங்குகிறது.ஆனால், களத்தில் நேருக்கு நேர் மோதும் முன்னர், சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளிடையே சகோதரத்துவம் வெளிப்பட்டது. தோனி, ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஒன்றாகப் போஸ் கொடுத்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படத்தை சூர்யகுமார் யாதவ் தனது அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' (X) பக்கத்தில் பகிர்ந்தார். இந்த பதிவைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர்.
"குரூப் டி.பி. கிடைத்துவிட்டது. குரூப் பெயரை மட்டும் பரிந்துரை செய்யுங்கள்," என்று சூர்யகுமார் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பலதரப்பட்ட ரசிகர்கள் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்தனர். டி=தோனி, ஆர்=ரோஹித், எஸ்=சூர்யா. 'டிஆர்எஸ்' என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டிருந்தார். மற்றொரு ரசிகர் "உலகக் கோப்பை வென்ற கேப்டன்கள்" என்று அவர்களைப் பாராட்டினார்.
"மூன்று சகோதரர்களும் அனல் பறக்கும் கெத்து" என ஒரு ரசிகர் வர்ணித்திருந்தார். "உடைக்க முடியாத மூவர் அணி! ஒரே பெட்டகத்திற்குள் ஜாம்பவான்கள்! இந்திய கிரிக்கெட்டின் மூவேந்தர்கள்" என மற்றொரு ரசிகர் அவர்களை பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். நட்சத்திரங்களின் சந்திப்பு கிரிக்கெட் உலகில் பெரும் பேசுபொருளாக மாறியது.
ஐபிஎல் 2026 தொடரில் தங்கள் அணியின் நிலை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும் சனிக்கிழமை அன்று நடைபெறும் இந்த முக்கியமான மோதலில் கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளன. பிளேஆஃப் சுற்றில் நீடிக்க இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சீசனில், லீக்கின் வெற்றிகரமான அணிகளான இவை சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி, சேப்பாக்கம் மைதான சாதக அம்சங்களுக்கிடையேயும் சீரற்ற ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. மிடில் ஆர்டர் பேட்டிங் தடுமாற்றமும், அழுத்தமான தருணங்களில் பந்துவீச்சு தவறியதும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எட்டு போட்டிகளில் மூன்று வெற்றிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ள சிஎஸ்கே, க காயத்தால் எம்.எஸ். தோனி விலகியிருப்பதையும் சமாளிக்கிறது. சஞ்சு சாம்சன் 300 ரன்களுக்கு மேல் குவித்து பேட்டிங்கில் முன்னணியில் இருக்க, ஜேமி ஓவர்ட்டன் பந்துவீச்சில் நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நிலையும் இதேபோல்தான் உள்ளது. டாப் ஆர்டர் பேட்டர்கள் வலுவான தொடக்கங்கள் கொடுத்தபோதிலும், நிலையற்ற மிடில் ஆர்டர் பேட்டிங் மற்றும் சீரற்ற பந்துவீச்சு முக்கியமான போட்டிகளில் தோல்வியைத் தந்துள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக 243 ரன்களைப் பாதுகாக்கத் தவறியதும் இதில் அடங்கும். ஒன்பதாவது இடத்தில் காணப்படும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளேஆஃப் வாய்ப்பு மிகவும் கடினமாகவே உள்ளது. எஞ்சிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றால்தான் கனவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும்.


Click it and Unblock the Notifications