பெங்களூர்: 2026 ஐபிஎல் தொடரின் தொடக்க விழா ரத்து செய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 11 ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த உருக்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2026ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது. வழக்கமாக ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், கடந்த 2025 ஜூன் 4 ஆம் தேதி ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு எந்தவொரு கலை நிகழ்ச்சியும் நடைபெறாது என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா உறுதிப்படுத்தியுள்ளார். தொடக்க விழா ரத்து செய்யப்பட்டாலும், மே 31 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியின் போது பிரம்மாண்டமான நிறைவு விழா நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையே, நெரிசல் மரணங்கள் குறித்து விசாரித்த நீதிபதி குன்ஹா கமிஷனின் பரிந்துரைப்படி சின்னசாமி மைதானத்தில் பல பாதுகாப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மைதானத்தின் நுழைவு வாயில்கள் விரிவுபடுத்தப்பட்டு, டிக்கெட் வழங்கும் முறை சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரசிகர்கள் மைதானத்திற்குள் நுழைவதற்கு முன்பு பாதுகாப்பாக காத்திருக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்த பின்னரே கர்நாடக அரசு ஐபிஎல் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அந்த 11 ஆர்சிபி ரசிகர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த சீசன் முழுவதும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் 11 இருக்கைகள் நிரந்தரமாக காலியாக விடப்படும் என ஆர்சிபி அணி மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் இணைந்து நெகிழ்ச்சியான முடிவை எடுத்துள்ளன. ரசிகர்கள் மத்தியில் இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
