பெங்களூர்: ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மிகவும் குறைவு என்றும், அதனை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என்றும் இந்திய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஐபிஎல் சீசன் தொடங்க உள்ள நிலையில், வீரர்களின் ஊதியம் குறித்த புதிய விவாதத்தை அவர் கிளப்பியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்காக விளையாடியுள்ள அபினவ் முகுந்த், வீரர்களுக்கு வழங்கப்படும் 20 முதல் 25 கோடி ரூபாய் சம்பளம் என்பது அந்தத் தொடரின் ஒட்டுமொத்த வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று கூறியுள்ளார். அதாவது இந்த 20 முதல் 25 கோடி சம்பளம் என்பதே ஐந்துக்கும் குறைவான வீரர்களுக்கு தான் கிடைக்கிறது. ஆனால், அதுவே குறைவு என சுட்டிக் காட்டி இருக்கிறார் அபினவ் முகுந்த்.

இது குறித்து அவர் பேசுகையில், "ஐபிஎல் உலகின் டாப் 5 லீக் தொடர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனால் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் உலக அளவில் டாப் 20 இடங்களுக்குள் கூட இல்லை. ஒரு ஐபிஎல் அணிக்கு ஆண்டுக்கு 400 முதல் 500 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாகத் தரவுகள் கூறுகின்றன. ஆனால் அந்த அணிகள் வீரர்களுக்காக 100 முதல் 120 கோடி ரூபாய் மட்டுமே செலவிடுகின்றன. இந்த ஒட்டுமொத்த சம்பள வரம்பை குறைந்தது 200 முதல் 250 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
உலகின் மற்ற பிரம்மாண்ட விளையாட்டுத் தொடர்களுடன் ஒப்பிடும்போது ஐபிஎல் வீரர்களின் நிலை பரிதாபமாக இருப்பதாக அபினவ் முகுந்த் சுட்டிக்காட்டியுள்ளார். இங்கிலாந்தின் கால்பந்து தொடரான இபிஎல் (EPL) தனது மொத்த வருமானத்தில் 63 சதவீதத்தை வீரர்களுக்குச் சம்பளமாக வழங்குகிறது. அமெரிக்காவின் என்எப்எல் (NFL) தொடர் 41 சதவீதத்தையும், என்பிஏ (NBA) தொடர் 44 சதவீதத்தையும் வீரர்களுக்கு வழங்குகின்றன. ஆனால் இந்தியாவோ ஐபிஎல் வருமானத்தில் வெறும் 8.5 சதவீதத்தை மட்டுமே வீரர்களுக்கு வழங்குகிறது.

சமீபத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சேர்ந்து 32,000 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போயுள்ளன. இந்த நிலையில், பிசிசிஐ மற்றும் அணிகள் ஈட்டும் லாபத்தில் வீரர்களுக்கு மிகக் குறைந்த பங்கையே வழங்குகின்றன என்பது முகுந்தின் முக்கிய வாதம்.
அதேநேரம், மற்ற வெளிநாட்டுத் தொடர்கள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன, ஆனால் ஐபிஎல் வெறும் 2 மாதங்கள் மட்டுமே நடக்கிறது என்பதையும் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், ஒரு போட்டிக்கான சம்பளம் என்ற அடிப்படையில் பார்த்தால் உலகின் முன்னணி கால்பந்து, கூடைப்பந்து தொடர்களை விட ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு சம்பளம் அதிகம்தான். அதே சமயம், பிசிசிஐ-யின் பிரம்மாண்ட வருமானத்தை ஒப்பிடும்போது வீரர்களின் ஊதியம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.