IPL 2026: பும்ராவை விமர்சிக்க கூடாது.. மும்பை அணிக்கு ஆதரவாக இருங்கள்.. பொலார்ட் கருத்து
மும்பை: மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த புதன்கிழமை ஹைதராபாத்துக்கு எதிராக 4 ஓவர்களில் 54 ரன்களைக் கொடுத்து, விக்கெட் எடுக்கவில்லை. இந்த ஆட்டம் விமர்சனங்களை எழுப்ப, அணி பேட்டிங் பயிற்சியாளர் கிரண் பொல்லார்ட் அவருக்கு ஆதரவளித்து, விரைவில் அவர் மீண்டு வருவதாக நம்பிக்கை தெரிவித்தார்.
ஐபிஎல் 2026 சீசனில் பும்ரா ஃபார்ம் இழந்துள்ளார். எட்டு போட்டிகளில் இரண்டே விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சராசரி 132, எக்னாமி 8.80. அணி 9வது இடத்தில் தடுமாறுவதால், இது மும்பை இந்தியன்ஸுக்கு பெரிய கவலையாக அமைந்துள்ளது.

ஆனால், நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீதான விமர்சனங்களைச் சரியாக அணுக வேண்டும் எனப் பொல்லார்ட் வலியுறுத்துகிறார். ஒரு சில திருப்தியற்ற ஆட்டங்களால் அவரது ஒட்டுமொத்தப் பங்களிப்பை மறைக்கக் கூடாது என்றார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 244 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த ஆட்டத்தில், பும்ரா விக்கெட் இல்லாமல் 4 ஓவர்களில் 54 ரன்கள் கொடுத்தார். இது அவரது கிரிக்கெட் வாழ்வில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஓவர்களில் ஒன்றாகும்.
இது குறித்து பேசிய பொலார்ட், "ஒரு கிரிக்கெட் வீரர் சிறப்பாக இல்லாதபோது, ஏன் என்று எல்லாவற்றையும் ஆராய்வோம். ஜஸ்பிரித் பும்ரா விஷயத்திலும் அது வேறுபட்டதல்ல," என்று பொல்லார்ட் குறிப்பிட்டார். பும்ராவின் பந்துவீச்சில் வேகம் குறைந்தது உள்ளிட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"அவர் பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார். ஒரு மனிதராக, நீங்களும் தவறிழைக்க, மோசமான நாளாக இருக்க, நல்ல சீசன் அல்லது சில மாதங்கள் இல்லாமல் இருக்க உரிமை உண்டு. அவர் செய்த நல்ல விஷயங்களைச் சில சமயங்களில் நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று நான் உணர்கிறேன்," என்று பொல்லார்ட் கூறினார்.
"ஆம், நாம் நிகழ்காலத்தில் வாழ முயற்சிக்கிறோம், அவர் தனது தரத்திற்கு ஏற்றபடி இல்லை. ஆனால், அவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இந்தியாவுக்காக நீண்ட காலமாக நம்பர் 1 பந்துவீச்சாளராக இருந்து வந்துள்ளார். சில சமயங்களில் நாம் கிரிக்கெட் வீரர்களுக்குச் சற்று தளர்வு கொடுக்கலாம், ஏனென்றால் நாம் எப்போதும் பொதுமக்களின் கண்களில் இருக்கிறோம், எனவே மோசமாகச் செயல்படும்போது, அது எப்போதும் முன்னிலைப்படுத்தப்படுகிறது," என்று பொல்லார்ட் விளக்கினார்.
"அவர் மிகப் பெரிய உயரங்களுக்கு மீண்டு வந்து விக்கெட்டுகளை வீழ்த்துவார் என்பதை நான் அறிவேன். மீண்டும் நாம் அனைவரும் மும்பை இந்தியன்ஸ் மட்டுமல்லாமல், இந்தியாவிற்காகவும் 'பும்ரா-பும்ரா' என்று பாடுவோம்," என அவர் உறுதியளித்தார்.
"நாங்கள் ஒரு அணியாக இணைந்து முழுமையான ஒரு ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்த முடியவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு இது நிலையானதாக இருக்கவில்லை," என்று பொல்லார்ட் தெரிவித்தார். "இதை ஏற்றுக்கொண்டோம், ஆனால் தோல்வியை ஏற்றுக்கொள்ளவில்லை. புள்ளிகள் அடிப்படையில், நாங்கள் இன்னும் போட்டியில் கணிசமாக இருப்பதால்தான் இந்தப் பார்வை."
"ஆடுகளங்களின் தன்மை குறித்துப் பேசிப் பயன் இல்லை. இரண்டு அணிகளும் ஒரே ஆடுகளத்தில்தான் விளையாடுகின்றன. யார் சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான் அது," டிரெஸ்ஸிங் ரூமிலும் வீரர்களின் மனதிலும் நான் உறுதியாகச் சொல்லக்கூடியது, அவர்கள் போராடத் தயாராக உள்ளனர். இத்தகைய விஷயங்கள் நடக்கும். இதைவிட மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் இறுதியில், நாங்கள் இன்னும் கிரிக்கெட் விளையாடுகிறோம், வாழ்க்கையில் இன்னும் பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. எனவே, அது அப்படித்தான்," என்றார்.


Click it and Unblock the Notifications