சென்னை: 2026 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை 25.20 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. தற்போது 2026 ஐபிஎல் தொடர் தொடங்க உள்ள நிலையில், அந்த முடிவை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்துள்ளார். ஆனால், இது குறித்துத் தனது இணையதளப் பக்கத்தில் பேசிய பத்ரிநாத், "கேமரூன் கிரீனை 25 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கியுள்ளனர். ஆனால் அவர் தற்போது மிக மோசமான ஃபார்மில் தவித்து வருகிறார்."

"சமீபத்தில் நடந்து முடிந்த 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரிலும் அவர் ஆஸ்திரேலிய அணிக்காகப் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆஸ்திரேலிய வீரர் என்ற ஒரு மாயையால் மட்டுமே அவர் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போயுள்ளார். இதற்கு முன் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளில் விளையாடிய போது அவர் தனி ஆளாக ஏதாவது சாதித்துள்ளாரா? கொல்கத்தா அணி எடுத்த இந்த முடிவு முற்றிலும் தவறானது" என்று அதிரடியாகத் தெரிவித்தார்.
மேலும், கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே குறித்தும் பத்ரிநாத் விமர்சித்துள்ளார். வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங் போன்ற திறமையான வீரர்கள் அணியில் இருக்கும் நிலையில், ரஹானேவை கேப்டனாகத் தொடர்ந்து செயல்பட அனுமதிப்பது அணியின் மிகப்பெரிய பலவீனம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமின்றி, 2026 ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா அணி செய்த முதலீடுகள் அனைத்தும் வீணாகிவிட்டதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

"அணி நிர்வாகம் பெரிதும் நம்பியிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா காயம் காரணமாகத் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார். அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட மதீஷா பதிரானா விளையாடுவதும் சந்தேகமாகவே உள்ளது. கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவுப்படி முஸ்தாபிசுர் ரஹ்மானும் அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இப்படி கொல்கத்தா அணி எடுத்த முடிவுகள் மற்றும் முதலீடுகள் அனைத்தும் தற்போது பெரும் சிக்கலில் முடிந்துள்ளன" என்று பத்ரிநாத் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
