IPL 2026: “வீட்டில் 2 இளம் பெண்களை”.. மைக்கில் வசமாக சிக்கிய பிராவோ.. தர்மசங்கடமான கொல்கத்தா அணி
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 19 ஆவது சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மைக் ஆன் செய்யப்பட்டுள்ளது தெரியாமல் அவர் பேசிய வார்த்தைகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அவருக்கு மிகப்பெரிய தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர், உதவிப் பயிற்சியாளர் ஷேன் வாட்சன் மற்றும் கேப்டன் அஜிங்க்யா ரஹானே ஆகியோருடன் டுவைன் பிராவோ செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர்கள் அனைவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஷேன் வாட்சனிடம் பேசிய பிராவோ, அபிஷேக் நாயரை கைகாட்டி, "இவர்கள் என்னை அழைத்தபோது, என் வீட்டில் 2 இளம் பெண்களை (Chicks) வைத்துக் கொண்டு இருந்தேன்" என்று கூறினார்.

அவர் மேலும் ஏதோ சொல்ல வந்த நிலையில், மைக் ஆன் செய்யப்பட்டுள்ளது என்பதை கேப்டன் ரஹானே அவருக்கு நினைவூட்டினார். இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த பிராவோ, தனது தவற்றை உணர்ந்து உடனடியாகப் பேச்சை நிறுத்தினார். மற்றவர்களும் அதன்பிறகு மிகவும் கவனமாகப் பேசத் தொடங்கினர்.
ரசிகர்கள் கடும் விமர்சனம்
பிராவோவின் இந்தப் பேச்சுக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. தரக்குறைவாகப் பேசுவதாக இது அமைந்துள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளப் பயனர் ஒருவர் தனது பதிவில், "கொல்கத்தா அணியின் முழு நிர்வாகமும் இருக்கும்போது பிராவோ இவ்வாறு பேசியது வெட்கக்கேடானது. மைக் ஆன் செய்யப்பட்டிருப்பதை ரஹானே சொன்னதும் பிராவோவின் முகம் அப்படியே மாறிவிட்டது. இதுபோன்ற மனநிலையுடன் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பது வருத்தமளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், தொழில்முறை இடங்களில் மைக் ஆன் செய்யப்பட்டுள்ளதா இல்லையா என்பதைத் தாண்டி, மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்திக் பாண்டியா சம்பவம்
பொதுவாக பிரபல விளையாட்டு வீரர்கள் தங்களது வார்த்தைகளில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். இதற்கு முன்பு இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா, பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசி பெரும் சிக்கலில் சிக்கியது பலருக்கும் நினைவிருக்கலாம்.
பின்னர் அந்த சர்ச்சைக்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். அந்தப் பெண்களைப் பற்றியும்,என்ன நடந்து கொண்டு இருந்தது என்பது பற்றியும் பிராவோ எந்த அர்த்தத்தில் கூறினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், இது போன்ற பொறுப்பற்ற பேச்சுகள் மற்றும் தனிப்பட்ட நடத்தைகள் வீரர்களின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Click it and Unblock the Notifications