IPL 2026: “நாங்க பெரிய தவறு எதுவும் செய்யவில்லை ஆனா..”.. DC அணியின் வெற்றி ரகசியத்தை சொன்ன ராகுல்
ஜெய்ப்பூர்: 2026 ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 226 ரன்கள் என்ற இமாலய இலக்கை அசால்ட்டாக விரட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது மட்டுமின்றி, பல ஆண்டுகளாக தன் மீது வைக்கப்பட்டு வந்த மிகப்பெரிய விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் கே.எல்.ராகுல்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த பரபரப்பான லீக் போட்டியில் 226 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுல் ஆரம்பம் முதலே ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினார். பதும் நிசங்காவுடன் இணைந்து அவர் அபாரமான தொடக்கத்தை கொடுத்தார். நிசங்கா 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த நிதிஷ் ரானா 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். மைதானத்தில் பவுண்டரி, சிக்சர் மழையாக பொழிந்த ராகுல் 40 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களுடன் 75 ரன்கள் குவித்து மிரட்டினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 187.50 ஆக இருந்தது. ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 16வது ஓவரில் டோனோவன் பெரைராவிடம் கேட்ச் கொடுத்து ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின் கடைசி 28 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 11 பந்துகளில் 18 ரன்களும், அசுதோஷ் சர்மா 15 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 25 ரன்களும் எடுத்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறச் செய்தனர்.
இந்த வெற்றிக்கு பிறகு ஆட்டநாயகன் விருது பெற்ற கே.எல்.ராகுல் பல தகவல்களை வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். "பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் நான் 67 பந்துகளில் 152 ரன்கள் குவித்தும் அணி தோல்வியடைந்தது மிகுந்த வேதனையை அளித்தது. விளையாட்டில் தனிப்பட்ட ரன்கள் மற்றும் சாதனைகளை விட அணியின் வெற்றி தான் மிக முக்கியம். வெற்றி பெறவில்லை என்றால் எந்த சந்தோஷமும் இல்லை" என்றார்.
"கடந்த 3 போட்டிகளில் அடுத்தடுத்து தொடர் தோல்விகளை சந்தித்த போது, அணியின் ஓய்வறையில் வெளிப்படையான பல விவாதங்கள் நடந்தன. நாங்கள் பெரிய தவறுகள் எதுவும் செய்யவில்லை என்றாலும், முக்கியமான கட்டங்களில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த தவறிவிட்டோம் என்பதை விவாதங்கள் மூலம் உணர்ந்தோம். டி20 போட்டிகளில் 2வது வாய்ப்பு கிடைக்காது என்பதால், கிடைக்கும் வாய்ப்புகளை கெட்டியாக பிடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதுவே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்" என ராகுல் கூறினார்.
தமது பேட்டிங்கில் எந்த விஷயம் மிகவும் திருப்தி அளிக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல், தனது ஸ்ட்ரைக் ரேட்டை சுட்டிக்காட்டினார். "பல ஆண்டுகளாக எனது ஸ்ட்ரைக் ரேட் குறித்து கடுமையான விவாதங்களும் விமர்சனங்களும் தொடர்ச்சியாக எழுந்தன. அதை மாற்றுவதற்காக நான் பல மாதங்களாக கடுமையாக உழைத்தேன். தற்போது அணியின் தேவைக்கும், நவீன டி20 கிரிக்கெட்டின் அதிவேகத்திற்கும் ஏற்ப எனது ஆட்டத்தை முழுமையாக மாற்றியமைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications