மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி மினி ஏலத்தில் யாருமே கண்டு கொள்ளாத வகையில் ஒரு சைலன்டான சம்பவத்தை செய்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இடம் கைவசம் இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாய் மட்டுமே எஞ்சி இருந்தது.
அவர்களுக்கு ஐந்து வீரர்களை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இந்த தருணத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்திலேயே கேமரன் கிரீனுக்கு விலை கேட்டது. ஆனால் அவர்களிடம் கையில் இருந்த தொகையை விட அதிக தொகைக்கு கேமரான் கிரீன் சென்றதால் அந்த அணி பின் வாங்கியது.

இந்த தருணத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தென்னாப்பிரிக்க நட்சத்திர வீரர் குயிண்டன் டி காக்கை அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. 33 வயதான குயிண்டன் டிகாக் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 115 ஆட்டங்களில் விளையாடி 3309 ரன்கள் அடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு சீசனில் விளையாடியிருக்கிறார்.
மும்பை அணிக்காக விளையாடிய போது முதல் இரண்டு சீசன்களிலும் அவர் 500 ரன்களுக்கு மேல் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குயிண்டன் டிக்காக் நல்ல ஃபார்மில் இருக்கின்றார். அண்மையில் கூட இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் குயின்டன் டிகாக் 46 பந்துகளை எதிர் கொண்டு 90 ரன்கள் குவித்தார். இதில் ஏழு சிக்ஸர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும்.
இதனால் குயிண்டன் டி காக்கை ஐபிஎல் அணிகள் அதிக விலை கொடுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி தட்டி சென்றது. இதன் மூலம் அந்த அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்,தொடக்க வீரர் ஆகிய இடமும் கிடைத்திருக்கிறது. ரோகித் சர்மாவுடன் இணைந்து தொடக்க வீரராக கூட அவர் களமிறங்கலாம். இதனால் மும்பை இந்தியன்ஸ் பலம் மேலும் அதிகரித்து இருக்கிறது.