மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான மோதல் எப்போதுமே விறுவிறுப்பாக இருக்கும் என்றாலும், மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவுக்கு கொல்கத்தா அணி என்றாலே ஒரு தனி பிரியம் உண்டு.
இதனை அடிப்படையாக வைத்து முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் கொல்கத்தா அணியை பாதாம் அல்வா என கிண்டல் செய்துள்ளார். அவர் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு ரோஹித் சர்மாவுக்கு கொல்கத்தா அணி ஒரு அல்வா போல இருந்தது. நாளை அவர்கள் பந்துவீச்சை ரோஹித் அல்வா சாப்பிடுவது போல துவம்சம் செய்யப்போகிறார். கொல்கத்தா அணி ரோஹித் சர்மாவுக்கு ஒரு பாதாம் அல்வா டீம் போன்றது. அந்த அணி வந்துவிட்டாலே ரோஹித் மிகவும் உற்சாகமாகிவிடுவார்" என்று ஜாலியாகப் பேசியுள்ளார்.

ஸ்ரீகாந்த் இப்படிச் சொல்வதற்குப் பின்னால் சில நீண்ட கால புள்ளிவிவரங்கள் உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த வீரர்களில் ரோஹித் சர்மா முக்கியமானவர். அவர் கொல்கத்தாவுக்கு எதிராக இதுவரை 1083 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 6 அரைசதங்கள் மற்றும் 1 சதமும் அடங்கும். 127.86 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை அவர் சிதறடித்துள்ளார். டேவிட் வார்னருக்குப் பிறகு கொல்கத்தாவுக்கு எதிராக 1000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் ரோஹித் சர்மா மட்டுமே.
வான்கடே மைதானத்திலும் கொல்கத்தாவுக்கு எதிராக மும்பை அணியின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அங்கு நடந்த 12 போட்டிகளில் மும்பை அணி 10 முறை வெற்றி பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த இரண்டு அணிகளும் மோதிய 35 போட்டிகளில் மும்பை 24 முறையும், கொல்கத்தா 11 முறையும் வெற்றி பெற்றுள்ளன. வான்கடே மைதானத்தில் மட்டும் ரோஹித் சர்மா கொல்கத்தாவுக்கு எதிராக 238 ரன்களைச் சேர்த்துள்ளார்.

அதே சமயம், ரோஹித் சர்மாவுக்கு ஒரு பெரிய சவாலும் காத்திருக்கிறது. கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், ரோஹித் சர்மாவை ஐபிஎல் தொடரில் இதுவரை 10 முறை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். நரைன் வீசும் பந்துகளில் ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் 106.77 ஆக மட்டுமே உள்ளது. 11 கிலோ உடல் எடையைக் குறைத்து புதிய பொலிவுடன் காணப்படும் ரோஹித் சர்மா, தனது 'பாதாம் அல்வா' டீமான கொல்கத்தாவுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை ரன் வேட்டை ஆடுவாரா என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.