IPL 2026: மனமுடைந்து போன பண்ட்.. 228 ரன் எடுத்தும் தோற்றது குறித்து விரக்தி.. பிளே ஆப் போக முடியாது
மும்பை: 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்த பிறகும், மும்பை இந்தியன்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்ததை அடுத்து லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மனமுடைந்து காணப்பட்டார். அந்த அணி கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து விட்டது என்பதால் அவர் வங்கதேசம் விரக்தியுடன் பேசினார். இந்த தோல்விக்கு என்ன காரணம் எனவும் அவர் கூறினார்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, நிக்கோலஸ் பூரனின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவர்களில் 228 ரன்கள் என்ற இமாலய இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தது. வான்கடே போன்ற சிறிய மைதானத்தில் இந்த இலக்கு சவாலானது என்றாலும், மும்பை பேட்ஸ்மேன்கள் அதை மிக எளிதாக மாற்றிவிட்டனர். தொடக்க வீரர்களாகக் களம் இறங்கிய ரோஹித் சர்மா 84 ரன்களும், ரையன் ரிக்கெல்டன் 83 ரன்களும் விளாசி மும்பை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். இறுதியில் 18.2 ஓவர்களிலேயே மும்பை அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 229 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தோல்விக்குப் பிறகு பேசிய ரிஷப் பண்ட் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். தோல்வியைக் குறித்துப் பேச வார்த்தைகள் இன்றி அவர் தவித்தார். "நிச்சயமாக நாங்கள் 10 முதல் 15 ரன்கள் வரை குறைவாக எடுத்துவிட்டோம். வான்கடே போன்ற பேட்டிங்கிற்குச் சாதகமான ஆடுகளத்தில் 230 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும். இத்தகைய ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. மும்பை பேட்ஸ்மேன்கள் இந்தச் சூழலை நன்கு பயன்படுத்திச் சிறப்பாக விளையாடினர்" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில் லக்னோ அணி 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிக்கோலஸ் பூரன் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகிய இரு அதிரடி வீரர்களும் ஒரே ஓவரில் ஆட்டமிழந்தது அந்த அணியின் ரன் வேகத்தை வெகுவாகக் குறைத்தது. கேப்டன் ரிஷப் பண்ட் 10 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து மீண்டும் ஏமாற்றினார். நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், இதுவரை 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளதும் அந்த அணியின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தத் தோல்வியின் மூலம் லக்னோ அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. மீதமுள்ள 5 போட்டிகளிலும் வென்றாலும் அந்த அணியால் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். 10 அணிகள் கொண்ட தொடரில் 14 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது என்பது மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே அமையும். தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது லக்னோ அணி நிர்வாகத்திற்கும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications