IPL 2026: ஃபில்டிங்கில் 5 கேட்சை கோட்டை விட்ட மும்பை இந்தியன்ஸ் அணி.. வரலாற்றில் மோசமான ஃபில்டிங்
ஐபிஎல் 2026 தொடரில் தர்மசாலாவில் வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மோசமான ஃபீல்டிங்கால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. ஷர்துல் தாக்கூர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும், மும்பை அணி ஐந்து கேட்சுகளை தவறவிட்டதது. இதன் விளைவாக, பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்து சவாலான இலக்கை நிர்ணயித்தது.
ஐந்து முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்தப் போட்டியில், ஐந்து கேட்சுகளைக் கோட்டைவிட்டதுடன், நான்கு முறை பந்தை சரியாக தடுக்கத் தவறியது. ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணி ஒரு போட்டியில் தவறவிட்ட அதிகபட்ச கேட்சுகள் இதுவேயாகும். இந்த மோசமான ஃபீல்டிங், பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கூடுதல் ரன்களை வழங்கி, மும்பையின் வெற்றி வாய்ப்பை கடுமையாகப் பாதித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆர்யா (27) மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். இந்தக் கூட்டணி 33 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் தீபக் சாஹர், ஆர்யாவை வெளியேற்றினார். ஆனால், தொடக்கத்திலேயே பிரப்சிம்ரன் சிங் கொடுத்த ஒரு கேட்சை மும்பை அணி தவறவிட்டது, அவர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமைந்தது. இங்கிருந்துதான் மும்பையின் துரதிர்ஷ்டம் தொடங்கியது.
தொடர்ந்து நீடித்த பிரப்சிம்ரன் சிங், சரளமாக ரன்களைக் குவித்து அரை சதம் அடித்தார். பவர்பிளேயில் பஞ்சாப் அணியின் ஸ்கோரை 55/1 ரன்களாக உயர்த்திய அவர், கூப்பர் கொன்னோலியுடன் (21) இணைந்து 57 ரன்கள் கூட்டாண்மை அமைத்தார். இதன் மூலம் 12வது ஓவரிலேயே பஞ்சாப் அணி 100 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் இருந்தது. பிரப்சிம்ரன் தனது அரை சதத்தை எட்டியதும் மேலும் சில சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்ட வேகத்தைக் கூட்டினார்.
எனினும், இந்தப் போட்டியின் திருப்புமுனையாக ஷர்துல் தாக்கூர் செயல்பட்டார். மூன்று பந்துகளில் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் மற்றும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (4) ஆகியோரை அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து ராஜ் பவா, கூப்பர் கொன்னோலியை வெளியேற்ற, ஷஷாங் சிங் மற்றும் மார்கோ ஜான்சென் போன்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி, பஞ்சாப் அணி தடுமாறியது.
வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தபோதிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி வலுவாகப் போட்டியின் இன்னிங்ஸை நிறைவு செய்தது. கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 53 ரன்களை விளாசியது. அஸ்மத்துல்லா ஓமர்சாய் 17 பந்துகளில் 38 ரன்கள் குவித்து அதிரடியாக ரன் சேர்த்தார். விஷ்ணு வினோத் மற்றும் சேவியர் பார்ட்லெட் ஆகியோரும் இறுதியில் அதிரடி காட்டினர். மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒரு விலையுயர்ந்த கடைசி ஓவர் மற்றும் மோசமான ஃபீல்டிங் காரணமாக, பஞ்சாப் அணி 200 ரன்களைக் கடந்தது.


Click it and Unblock the Notifications