IPL 2026: மும்பை அணியை பார்க்கவே வேதனையாக இருக்கு.. தோல்விக்கு காரணம் இது தான்- ஹர்பஜன்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததையடுத்து வெளியேறியுள்ளது. முன்னாள் கேப்டன் ஹர்பஜன் சிங், அணியின் உடல்மொழி, நம்பிக்கையின்மை, ஜஸ்பிரித் பும்ராவை அதிகமாய் சார்வது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மும்பை இந்தியன்ஸ், பிளேஆஃப் சுற்றுக்கான போட்டி சூடுபிடிப்பதற்கு முன்பே தொடரிலிருந்து வெளியேறியது. நேற்று ஞாயிற்றுகிழமை நடந்த தோல்வி, அணியின் பல முக்கிய குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. பேட்டிங் சறுக்கல்கள், பந்துவீச்சில் போதிய தாக்கமின்மை, ஃபில்டிங் சொதப்பல்கள் ஆகியவை பின்னடைவாக அமைந்தன.

தோல்விப் பயணம் அணியின் நம்பிக்கையைச் சிதைத்து, போராட்ட குணமில்லாமல் போனதைக் கவனித்த ஹர்பஜன் சிங், “மும்பை இந்தியன்ஸின் உடல்மொழி, மிகவும் முக்கியமானது. நான் இந்த அணியில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் இருந்திருக்கிறேன். ஐந்து போட்டிகளில் தோற்றபோதும், எங்கள் உடல்மொழி இப்படி மோசமாக இருந்ததில்லை. போராடும் குணம் எப்போதும் இருந்தது. இப்போது அந்த நம்பிக்கை இல்லை,” என்று வெளிப்படுத்தினார்.
இத்தகைய சவாலான சூழலில் அணியை யாரேனும் வழிநடத்த முன்வர வேண்டும் என்றும் ஹர்பஜன் வலியுறுத்தினார். அவர், “நடந்ததெல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் களத்தில் நாம் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்துதான் விஷயங்கள் மாறும். அந்த தலைவராக ஒருவர் முன்வந்து அணியை வழிநடத்த வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
அணியின் அசுர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை மிகையாகச் சார்ந்திருப்பதையும் ஹர்பஜன் சிங் விமர்சித்தார். பும்ரா இந்த சீசனில் வழக்கமான பார்மில் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். “பும்ரா எந்த நேரத்திலும் போட்டியின் போக்கை மாற்றக்கூடியவர். ஆனால், அவரை அதிகமாய் சார்ந்திருப்பது முறையல்ல. ட்ரென்ட் போல்ட், தீபக் சாஹர், ஹர்திக் பாண்டியா போன்ற மற்ற பவுலர்கள் அனைவரும் மன நம்பிக்கையின்றி உள்ளனர்,” என்று அவர் கூறினார்.
“இந்த அணியின் மிகப் பெரிய பலவீனம் தரமான உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாததுதான் என்று நான் நினைக்கிறேன். கடந்த காலத்தில் சில நல்ல இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தனர், ஆனால் இப்போது யாரும் இல்லை. அது அணியில் ஒரு பெரிய இடைவெளி,” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications

