IPL 2026: மும்பை அணிக்கு பிரச்சனையே மும்பை தான்.. கடவுளால் கூட காப்பாற்ற முடியாது..EX வீரர்கள் சாடல்
மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் மோசமான ஃபில்டிங்கே குற்றம்சாட்ட வேண்டும் என முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் முரளி கார்த்திக் கூறியுள்ளார். ஹர்திக் பாண்டியா தலைமையிலான MI, வான்கடே மைதானத்தில் 244 ரன்கள் இலக்கைப் பாதுகாக்கத் தவறி, இச்சீசனின் ஏழாவது தோல்வியைப் பதிவு செய்தது.
இரண்டாவது இன்னிங்ஸில், முதல் விக்கெட் எடுக்க MI தவித்தபோது, அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட்டை நமன் திர் பலமுறை தவறவிட்டார். இந்த கைநழுவிய வாய்ப்புகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. நட்சத்திர ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான ஹெட், 30 பந்துகளில் எட்டு சிக்ஸர்களுடன் 76 ரன்கள் விளாசினார்.

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் இணைந்து பவர்பிளேயில் 92 ரன்களையும், வெறும் 8.4 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 129 ரன்களையும் SRH அணிக்கு ஈட்டித் தந்தனர். அல்லாஹ் கசன்ஃபர் நடு ஓவர்களில் விரைவாக இரண்டு விக்கெட்டுகளை எடுத்த போதிலும், ஹைதராபாத் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை சேஸ் செய்தது. எட்டு பந்துகள் மீதமிருக்க, பிரம்மாண்ட இலக்கை எட்டிப் பிடித்த SRH, போட்டியின் வரலாற்றில் நான்காவது அதிகபட்ச ரன் சேசிங்கை பதிவு செய்தது.
நமன் திர்-ன் களத்தடுப்பு மன்னிக்க முடியாதது என்றும், MI தங்களுக்குத் தாங்களே சேதத்தை ஏற்படுத்திக் கொண்டது என்றும் முரளி கார்த்திக் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், "களத்தடுப்பைப் பாருங்கள், மூன்றாவது ஓவரில் டிராவிஸ் ஹெட்டை தவறவிட்டீர்கள், அலா கசன்ஃபர் பந்துவீசும்போதும் மீண்டும் தவறவிட்டீர்கள். இப்படி அடி வாங்கும்போது, வாய்ப்புகளை தவறவிட்டால், கடவுளாலும் காப்பாற்ற முடியாது," என்றார்.
"அவை எளிதான வாய்ப்புகள். நமன் திர், இதற்கு நியாயம் சொல்வே முடியாது. இந்த சீசனில் பல கேட்சுகள் தவறவிடப்படுகின்றன. சில அற்புதமான கேட்சுகள் பிடிக்கப்பட்டாலும், இது எளிதானது. பவர்பிளேயில் விக்கெட்டுகள், ஆரம்பத்திலேயே ஒரு அடி கொடுக்க வேண்டும் என நீங்கள் விரும்பும்போது, எப்போது அதைச் செய்தீர்கள்? பத்தாவது ஓவரில் தான். நீங்கள் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளவில்லை," என்று அவர் கூறினார்.
ஐபிஎல் 2026-ல் MI அடைந்த மற்றொரு தோல்வி, அவர்களை புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்திலேயே வைத்துள்ளது. இதுவரை நான்கே புள்ளிகள் மற்றும் -0.784 என்ற நிகர ரன் ரேட்டுடன், அவர்களின் நிலைமை மோசமாக உள்ளது.
இதற்கிடையில், முன்னாள் இந்திய பேட்டர் வீரேந்திர சேவாக், MI-யின் மிகப்பெரிய பிரச்சனை தரமான வீரர்கள் இல்லாதது அல்ல என்றும், களத்தில் அவர்களின் மோசமான செயல்பாடுகளே காரணம் என்றும் கூறினார். "திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், ஆனால் அவை நடக்கவில்லை, சரியா? தேவைப்படும்போது விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றால், ரன்களை எப்படி நிறுத்துவீர்கள்?" என்று அவர் வினவினார்.
"MI-யின் பந்துவீச்சு அவர்களை மிகவும் ஏமாற்றுகிறது என்று நினைக்கிறேன். MI எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியிருப்பதாக நான் உணர்கிறேன், ஆனால் அவர்களின் திட்டமே சரியாக இல்லை," என்றும் வீரேந்திர சேவாக் தனது கருத்தைப் பதிவு செய்தார். மும்பை அணி அடுத்ததாக, மே 2, சனிக்கிழமை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில், தங்களது பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.


Click it and Unblock the Notifications

