மும்பை: ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 11 ஆண்டுகளாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் மொத்தமாக அந்த அணிக்கு 4027 ரன்களை அடித்திருக்கிறார். சிறுவயதில் இருந்து அந்த அணியில் பயணித்து வரும் சஞ்சு சாம்சன் தற்போது விலகி இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டன் பதவி தமக்கு வழங்கப்படவில்லை என்பதால் சஞ்சு சாம்சன் கோபத்தில் இருந்துதாகவும், அணியில் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. மேலும் இது குறித்து ராஜஸ்தான் அணியின் உரிமையாளர் மனோஜ் பதாலே பல உண்மைகளை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கடந்த ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் நடந்து கொண்டிருக்கும்போதே எங்களிடம் அணியை விட்டு விலக தாம் முடிவு செய்திருப்பதாக கூறினார். போட்டி முடிவடைந்த உடன் நாங்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம். அதில் சஞ்சு சாம்சன் நேர்மையான ஒரு விஷயத்தை கூறினார்.
அதில் தனிப்பட்ட முறையில் தமது உணர்ச்சிகள் இங்கு வற்றிவிட்டதாகவும், ராஜஸ்தான் அணிக்காக தான் மிகப்பெரிய அளவு கவனம் செலுத்தி வந்ததாகவும் கூறினார். கடந்த சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக செயல்பட்டது அவரை மிகவும் பாதித்ததாகவும் இதனால் தமது ஐ பி எல் வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியை தேடவே வேறு அணிக்கு செல்ல சஞ்சு சாம்சன் முடிவெடுத்ததாகவும் உரிமையாளர் மனோஜ் பதாலே குறிப்பிட்டார்.
சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்த போது அது எங்களுக்கு வித்தியாசமாக தெரிந்தது. அவர் உண்மையை சொன்னார். அவர் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால் அதில் பல அர்த்தங்கள் இருக்கும். எங்கள் அணிக்காக உண்மையாக அவர் உழைத்திருக்கிறார். எனவே தான் நாங்கள் அவரை விடுவிக்க முடிவெடுத்தோம்.
எங்கள் அணியில் பல பிரச்சனைகள் இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிறது. அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. ராகுல் டிராவிட் வெளியேறியதும் தற்போது சாம்சன் சென்றதும் எங்கள் அணியில் பிரச்சனை இருப்பது போல் காட்டப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் நாங்கள் கண்டு கொள்ளவில்லை.
நாங்கள் அடுத்தது என்ன செய்ய வேண்டும் எப்படி அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான் முயற்சி செய்து கொண்டிருக்கின்றோம்.
வெளியில் பிரச்சினை இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளே அனைத்தும் அமைதியாக தான் இருக்கின்றது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் பதாலே கூறியுள்ளார்.