ஐபிஎல் வரலாற்றில் முதல் அணி.. பச்சை ஜெர்சி போட்டு கொண்டாடிய ஆர்சிபி..பைனல் குறித்து ரஜத் சொன்ன தகவல்
பெங்களூரு: ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணி, இன்று, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக தங்களது சொந்த மைதானமான எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் ஐபிஎல் போட்டி, ஆர்சிபியின் 100-வது ஆட்டமாகும். இதன் மூலம், ஒரே மைதானத்தில் 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, அவர்களின் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் 98 போட்டிகளில் விளையாடி, இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. தங்கள் 100-வது போட்டியை சிறப்பிக்கும் வகையில், ஆர்சிபி அணி "பசுமை தினம்" முயற்சியை மேற்கொண்டது. சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பச்சை நிற ஜெர்சிகளை அணிந்து களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

18வது ஆண்டில் தான் ஆர்சிபி முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. ஆனால், அந்த 18 வருடமும் ஆத்சிபி ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும் சின்னசாமி மைதானத்தில் குவித்து மங்களது அணிக்கு ஆதரவு கொடுத்து, கொண்டாடினர். எனினும் 2025-ஆம் ஆண்டில், ஆர்சிபி அணி முதல் ஐபிஎல் பட்டத்தை வென்ற கொண்டாட்டங்களின் போது, ஒரு துயரச் சம்பவத்தில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இந்த சோகமான நிகழ்வைத் தொடர்ந்து, சின்னசாமி மைதானம் பெரிய கூட்டங்களுக்குப் பொருத்தமற்றது என அறிவிக்கப்பட்டது. இதனால், உலகக் கோப்பை மற்றும் உள்ளூர் போட்டிகளை நடத்தும் வாய்ப்பையும் அது இழந்தது. கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் (KSCA), ஆர்சிபி அணி மற்றும் மாநில அரசு இணைந்து, மைதானத்தை பாதுகாப்பானதாகவும், போட்டிகளை நடத்த உகந்ததாகவும் மாற்ற தீவிர சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு கூட, ஆர்சிபி தங்கள் சொந்த மண்ணில் எந்த போட்டிகளையும் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்ற அச்சம் இருந்தது. இருப்பினும், இறுதியில், அவர்களின் ஏழு உள்ளூர் போட்டிகளில் ஐந்து சின்னசாமி மைதானத்திலும், மீதமுள்ள இரண்டு போட்டிகள் இரண்டாம் நிலை மைதானமான ராய்ப்பூரிலும் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், சனிக்கிழமை டாஸ் போடும் போது, இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டி எம். சின்னசாமி மைதானத்தில் நடைபெறலாம் என்று பேசினார். நடப்பு சாம்பியனின் சொந்த மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்துவது ஒரு மரபாக இருந்தாலும், அண்மைய பாதுகாப்பு கவலைகள் காரணமாக ஆர்சிபிக்கு இம்முறை நிலைமை சற்று சிக்கலாக இருந்தது.
மைதானத்தில் ஆர்சிபியின் சிறப்பான ஆட்டம் குறித்து கேட்கப்பட்டபோது, படிதார் புன்னகையுடன், "நிச்சயமாக, இதற்குப் பின்னால் நிறைய திட்டமிடல் இருந்தது. இந்த ஆண்டு சின்னசுவாமியில் இறுதிப் போட்டி இருப்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, நாங்கள் அனைத்து உள்ளூர் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும்" என்று கூறினார். அவரது இந்த கருத்து, ஐபிஎல் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்புகளைத் தூண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications