சென்னை: ஐபிஎல் 2026 தொடர் வரும் மார்ச் 28 அன்று பிரம்மாண்டமாகத் தொடங்கவுள்ளது. நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தனது முதல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை உள்ளூரில் எதிர்கொள்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் முனைப்பில் ஆர்சிபி அணி தீவிரமாக உள்ள நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த அணி குறித்து ஒரு முக்கிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடருக்குப் பிறகு விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே ஆர்சிபி அணி நிர்வாகம் தக்கவைத்தது. முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்களை விடுவித்து பெரிய முடிவை எடுத்தது. பின்னர் 2025 மெகா ஏலத்தில் ஃபில் சால்ட், ஜித்தேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், டிம் டேவிட் மற்றும் புவனேஷ்வர் குமார் போன்ற சிறந்த வீரர்களை வாங்கி அணியை வலுப்படுத்தியது. இந்த சிறப்பான மாற்றங்களின் பலனாக, 18 வருடமாக கோப்பை வெல்லாத அணி என்ற நிலையை முடிவுக்கு கொண்டு வந்து ஐபிஎல் 2025 தொடரில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஆர்சிபி அணியின் தற்போதைய கட்டமைப்பு குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "இந்த அணியை வைத்து ஆர்சிபி அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் கோப்பைகளை வெல்ல முடியும். ஐபிஎல் தொடரை வெல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், அவர்களிடம் உள்ள வீரர்களின் கூட்டமைப்பு மற்றும் ஒரு வீரருக்கு நிகரான சிறந்த மாற்று வீரர்கள் அணியைப் பலப்படுத்துகிறார்கள். அவர்கள் தங்களது குறைகளைச் சரிசெய்துள்ள விதம் மிகச் சிறப்பாக உள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் இந்த சிறப்பான அணியிடம் உள்ளன" என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆர்சிபி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இது குறித்துப் பேசிய அஸ்வின், "உண்மையாகச் சொல்லப்போனால் இது ஆர்சிபி அணிக்கு ஒரு வகையில் நன்மையே. ஹேசில்வுட் இல்லாத நேரத்தில், ஒருவேளை ஃபில் சால்ட்டின் ஃபார்ம் குறித்து அணிக்குக் கவலை இருந்தால், சால்ட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகிய இரு வெளிநாட்டு வீரர்களையும் அவர்கள் அணியில் சேர்க்கலாம். ஹேசில்வுட் அணிக்குத் திரும்பும்போது எந்த வீரரைச் சேர்ப்பது என்பது குறித்து அவர்களுக்கு ஒரு தெளிவான முடிவு கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
