கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான கடைசி பந்து வெற்றிக்கு பிறகு பேசிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட், இளம் வீரர் முகுல் சவுத்ரியின் அபாரமான ஆட்டத்தை விவரிக்க தன்னிடம் வார்த்தைகளே இல்லை என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த 15வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி நிர்ணயித்த 182 ரன்கள் இலக்கை லக்னோ அணி கடைசி பந்தில் எட்டிப் பிடித்தது. 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்த லக்னோ அணியை, முகுல் சவுத்ரி (54 ரன்கள்) மற்றும் ஆயுஷ் பதோனி (54 ரன்கள்) ஆகியோரின் அதிரடி ஆட்டம் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. குறிப்பாக கடைசி 4 ஓவர்களில் 54 ரன்கள் தேவை என்ற நிலையில் முகுல் சவுத்ரி தனி ஆளாக நின்று போட்டியை வென்று கொடுத்தார்.

வெற்றி குறித்து பேசிய ரிஷப் பண்ட், "வலைப்பயிற்சியில் முகுல் சவுத்ரி சிறப்பாக ஆடுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஆனால் அதனை ஒரு இக்கட்டான போட்டியில் அப்படியே செயல்படுத்தி காட்டிய விதம் ஆச்சரியமாக உள்ளது. இந்த வெற்றியை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. அந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறேன்" என்றார்.
சிறிய நகரங்களில் இருந்து வரும் வீரர்கள் குறித்து பேசிய அவர், "ஒரு கேப்டனாகவும், நிர்வாகமாகவும் ஒரு வீரர் மீது நாம் வைக்கும் நம்பிக்கை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த நம்பிக்கை தான் ஒரு வீரரை அற்புதங்களைச் செய்யத் தூண்டுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் பொறுப்பேற்று அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வது, எங்கள் அணியின் பலத்தை காட்டுகிறது. ஏதோ ஒன்று அணிக்குள் சிறப்பாக உருவாகி வருகிறது, அது விரைவில் முழுமையாக வெளிப்படும்" எனத் தெரிவித்தார்.
அரைசதம் விளாசிய ஆயுஷ் பதோனி குறித்து கூறுகையில், "அவர் இப்போது எங்கள் அணியின் ஒரு சீனியர் வீரராக மாறிவிட்டார். அவருக்கு வழங்கப்பட்ட பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடினார். முதல் 2 போட்டிகளில் அவர் சரியாக ஆடவில்லை என்றாலும், இது போன்ற கடினமான சூழலில் அவர் நிலைத்து நின்று ஆடியது பாராட்டுக்குரியது" என்றார்.

பந்துவீச்சு குறித்துப் பேசிய பண்ட், "முகமது ஷமியின் அனுபவம் அணிக்கு விலைமதிப்பற்றது. சில நேரங்களில் விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும், அவர் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். ஷமி மட்டுமின்றி ஒட்டுமொத்த பந்துவீச்சு பிரிவும் இன்று சிறப்பாகச் செயல்பட்டது," எனப் புகழாரம் சூட்டினார். 3 விக்கெட் வித்தியாசத்தில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.