மும்பை: ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதலில், ரோஹித் சர்மா இரண்டு முக்கியச் சாதனைகளைப் படைத்தார். மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டி20 கிரிக்கெட்டில் 550 சிக்ஸர்களை விளாசிய முதல் இந்தியர், ஐபிஎல் வரலாற்றில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
மும்பை அணி 221 ரன்கள் இலக்கை துரத்த, டி20-யில் 550 சிக்ஸர்களை எட்ட ரோஹித் சர்மாவுக்கு மூன்று சிக்ஸர்கள் தேவைப்பட்டன. ஐந்தாவது ஓவரிலேயே அந்த மைல்கல்லை எட்டிய அவர், டி20 கிரிக்கெட் வரலாற்றில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பதிவு செய்தார்.

இதே போட்டியில், ரோஹித் வெறும் 23 பந்துகளில் அதிரடி அரை சதத்தைப் பதிவு செய்தார். இந்த அரை சதம், ஐபிஎல் வரலாற்றில் 50வது முறையாக 50 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற பெருமையை அவருக்குப் பெற்றுத்தந்தது.

தற்போது 274வது ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் ரோஹித், இரண்டு சதங்கள், 47 அரைசதங்களுடன் (இப்போட்டிக்கு முன்) 50 முறை அரைசதம் அல்லது சதம் கடந்து, அரிய சாதனையாளர் பட்டியலில் இடம்பிடித்தார்.
ஐபிஎல்-லில் அதிக 50+ ரன்கள் எடுத்தோர் பட்டியலில் விராட் கோலி (72) முதலிடம். ஆர்சிபி அணிக்காக 268 போட்டிகளில் 8 சதங்கள், 64 அரைசதங்களுடன் 72 முறை 50 ரன்களைக் கடந்துள்ளார். இவரது ஐபிஎல் அறிமுகம் 2008 ஏப்ரல் 18 அன்று கொல்கத்தாவுக்கு எதிராக நிகழ்ந்தது.

இப்பட்டியலில், டேவிட் வார்னர் (66), ஷிகர் தவான் (53) ஆகியோர் கோலிக்கு அடுத்த இடங்களைப் பெறுகின்றனர். நான்காவது இடத்தில் ரோஹித் சர்மா (50) மற்றும் ஐந்தாவது இடத்தில் கே.எல். ராகுல் (45) உள்ளனர்.