வைபவ் சூர்யவன்ஷி ஆடியதை பார்த்து ரோஹித் சர்மா விரக்தி.. மும்பை இந்தியன்ஸ் திட்டம் எல்லாம் குளோஸ்!
கவுகாத்தி: 2026 ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவை அடித்து ஆடியது ரோஹித் சர்மாவை விரக்தியில் ஆழ்த்தியது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டம் தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பும்ராவை 15 வயது சிறுவனான வைபவ் சூர்யவன்ஷி எப்படி எதிர்கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அங்கு நடந்தது வேறு. பும்ரா வீசிய முதல் பந்தையே அசாதாரணமாக சிக்ஸருக்கு பறக்கவிட்டு அனைவரையும் மிரள வைத்தார் சூர்யவன்ஷி. இந்த துணிச்சலை பார்த்து பும்ராவே ஒரு கணம் ஆச்சரியத்தில் சிரித்துவிட்டார். தனது தாக்குதலை நிறுத்தாத அந்த சிறுவன், அதே ஓவரில் வீசப்பட்ட ஷார்ட் பிட்ச் பந்தை மீண்டும் ஒரு பிரம்மாண்ட சிக்ஸருக்கு விரட்டினார். பும்ராவை எதிர்கொண்ட 5 பந்துகளில் 13 ரன்களைக் குவித்து அந்த மினி யுத்தத்தில் சூர்யவன்ஷி அபார வெற்றி பெற்றார்.

வைபவின் இந்த அதிரடியை பார்த்த ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா போன்ற மூத்த வீரர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். ஷர்துல் தாக்குர் வீசிய பந்துகளையும் அவர் சிக்ஸர், பவுண்டரி என அடுத்தடுத்து விளாசியதால், தங்களின் திட்டங்கள் செயல்படாததை எண்ணி ரோஹித் சர்மா கடும் அதிருப்தியடைந்தது கேமராவில் பதிவானது.
வெறும் 14 பந்துகளை மட்டுமே சந்தித்த சூர்யவன்ஷி 39 ரன்களை குவித்து மிரட்டினார். எனினும், ஆட்டத்தின் 5வது ஓவரில் ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் திலக் வர்மாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். தவறான ஷாட் அடித்து விக்கெட்டை இழந்த விரக்தியில், மைதானத்திலேயே தன்னைத்தானே திட்டிக் கொண்டு அவர் கோபமாக கத்தியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மறுபுறம் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 11 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியால் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications